சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்திற்காக தனது உடலை மெருகேற்றி இருக்கிறார் ராகவா லாரன்ஸ்.
கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸை வைத்து பி.வாசு இயக்குகிறார். லைகா புரடக்ஷன் தயாரிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். கலை - தோட்டா தரணி. மேலும், நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
சந்திரமுகி-1 திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு பெரும் வெற்றி பெற்றதோடு மிக அதிகமான வசூலையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ராகவா லாரன்ஸ் உடற்கட்டான புகைப்படத்தினை பகிர்ந்து கூறியிருப்பதாவது:
எல்லோருக்கும் நான் இரண்டு விசயங்களை கூற வேண்டும். முதலாவது, என்னுடைய சிறிய முயற்சியாக சந்திரமுகி-2 படத்திற்காக எனது உடலை மாற்றியிருக்கிறேன். எனது பயிற்சியாளர் சிவா மாஸ்டருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டாவதாக இந்தனை ஆண்டுகளாக எனது அறக்கட்டளைக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. தற்போது நான் நிறைய படங்களில் நடிக்க கையெழுத்திட்டுள்ளேன். அதனால் இனிமேல் நானே அறக்கட்டளைக்கு தேவையான பணத்தினை பார்த்துக்கொள்கிறேன். யாரும் அன்பளிப்பு அளிக்க வேண்டாம். உங்களின் ஆசிர்வாதம் போதும். உங்களின் அன்புக்கும் உதவிக்கும் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். விரைவில் உங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவினை ஏற்பாடு செய்யவிருக்கிறேன். எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி.