நடிகர் ரஜினிகாந்த் உடன் நடிகர் யாஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய சினிமாவில் ஒரு நடிகர் 10 ஆண்டுகளை நிறைவு செய்வதே பெரும் சாதனையாக இருக்கும்போது, தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் 45 ஆண்டுகளாக நடித்து தன் 170-வது படத்தை நெருங்க இருக்கிறார். அவரே ஒருமுறை சொன்னதுபோல் ‘இந்தக் குதிரையின் வீழ்ச்சியை யாராலும் பார்க்க முடியாது’போல. இன்றும் ரூ.100 கோடி சம்பளம் வாங்கும் அளவிற்கு அவர் படங்களின் வரவேற்பும் அப்படி இருக்கிறது.
தற்போது, ‘ஜெயிலர்’, ‘லால் சலாம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ரஜினி தன் துறையில் உச்சத்தில் இருக்கும்போதே ஓய்வை அறிவிக்க இருப்பதாக சில மாதங்களாக தகவல் கசிந்து வருகிறது. அதேநேரம், வயது மூப்பு காரணமாக உடல்நலமும் சரியாக ஒத்துழைக்காத நிலையில்தான் அவர் இருக்கிறார்.
இதையும் படிக்க: அநீதி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
இந்நிலையில், அவர் அடுத்ததாக ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் படத்தில் நடித்து முடித்ததும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கிறார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், லோகேஷ் இயக்கும் படத்தில் ரஜினியுடன் தானும் நடிப்பதாக இயக்குநர் மிஷ்கின் நேர்காணல் ஒன்றில் கூறி தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், இதுதான் ரஜினியின் கடைசி படமாக இருக்கும் எனச் சொன்னார்கள் என தன் பேச்சில் மிஷ்கின் குறிப்பிட்டார்.
தற்போது, இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க கேஜிஎஃப் படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமடைந்த நடிகர் யாஷ்ஷிடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.