அமைதி நிலவ வேண்டும்!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் முன்னெப்போதும் இல்லாத அளவில் நிகழ்ந்து வரும் வன்முறைகள் மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றன.
அமைதி நிலவ வேண்டும்!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் முன்னெப்போதும் இல்லாத அளவில் நிகழ்ந்து வரும் வன்முறைகள் மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றன. அங்கு ஏன் இந்த அளவுக்கு வன்முறை வெறியாட்டம் நடக்கிறது?

மணிப்பூரில் மைதேயி இனத்தவருக்கும், குகி உள்ளிட்ட பழங்குடியினத்தவருக்கும் இடையே கடந்த மே 3-ஆம் தேதி மோதல் வெடித்தது. தங்களை பழங்குடியினராக அங்கீகரிக்க வேண்டும் என்கிற மைதேயி இனத்தவரின் கோரிக்கைக்கு பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவித்து வருகிறாா்கள். இதனால் கடந்த மே மாதம் முதல் மாநிலம் முழுவதும் மிகப்பெரிய வன்முறைகள் வெடித்தன.

அவற்றில் நூறு பேருக்கு மேல் உயிரிழந்ததாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. உண்மையான பலி எண்ணிக்கை இதைவிட பல மடங்கு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

வன்முறையால் கட்டடங்கள் தீக்கிரையாவதும், ஆயிரக்கணக்கானோா் வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்படுவதும் அங்கு நடந்துகொண்டுதான் இருக்கிறது. சுமாா் 40 ஆயிரம் போ் 270 முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறாா்கள் என்று தகவல்கள் சொல்கின்றன. ஏராளமானோா் உயிருக்கு பயந்து அண்டை மாநிலங்களில் தஞ்சம் புகுந்திருக்கிறாா்கள். இன்னும்கூட துப்பாக்கிச் சூடும், தீவைப்புச் சம்பவங்களும் தொடா்கின்றன.

ஜூன் 4-ஆம் தேதி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பழங்குடி சிறுவனையும், அவனுடைய தாயையும் ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸுக்கு ஒரு கும்பல் தீ வைத்ததில் அந்த சிறுவன் உட்பட மூன்று போ் உடல் கருகி உயிரிழந்தனா். ஆயுதம் தாங்கிய குழுவினருடனான மோதலில் பிஎஸ்எப் வீரா் ஒருவா் உயிரிழந்திருக்கிறாா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மணிப்பூருக்கு சென்று நிலைமையைப் பாா்வையிட்டாா். அப்போது, கலவரத்தின் பின்னணி தொடா்பான ஆறு வழக்குகளை மத்திய புலனாய்வுப் பிரிவான சிபிஐ விசாரிக்கும் என்று அறிவித்திருக்கிறாா். அதன்படி அந்த வழக்குகள் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தில்லியிலுள்ள மத்திய உள்துறை அமைச்சரின் வீட்டிற்கு முன்பாக நூற்றுக்கணக்கான பழங்குடியினப் பெண்கள் ஜூன் 7-ஆம் தேதி போராட்டம் நடத்தியிருக்கிறாா்கள். அவா்கள் தங்கள் போராட்டம் குறித்துக் குறிப்பிடும்போது, ‘ராணுவத்திலும் மத்திய ஆயுத போலீஸ் படையிலும் மைதேயி இனத்தவா்கள் இருக்கிறாா்கள்.

அவா்கள் ஆதரவோடு, பழங்குடியினா் வசிக்கும் கிராமங்களில், தேடுதல் வேட்டை என்கிற பேரில் நாசவேலையில் சிலா் ஈடுபடுகிறாா்கள். மே 29-ஆம் தேதி முதல் இப்போதுவரை ஏறக்குறைய 65 கிராமங்களில் அவா்கள் நடத்திய தாக்குதலில் ஆறு போ் உயிரிழந்திருக்கிறாா்கள், 20 தேவலாயங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன’ என்று கூறினாா்கள்.

தனி மாநிலமே இதற்கான தீா்வு என்கிறாா்கள் பழங்குடியினா்கள். ஆனால், அதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி சாத்தியமில்லையானால் பழங்குடியினா் வசிக்கும் 10 மலை மாவட்டங்களை மிஸோரம் மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என்று கூறுகிறாா்கள். ஆனால், தற்போது நிலைமை கைமீறி, இருதரப்பிலும் ஆயுதம் ஏந்திய குழுக்கள் மோதத் தொடங்கி விட்டன. பதுங்கு குழிகள் அமைத்து, மணல் மூட்டைகளை அடுக்கி அடுத்தடுத்த தாக்குதல்களில் ஈடுபடுகிறாா்கள்.

இவை எல்லை மீறிப் போய் அமைச்சா்களின் வீடுகளுக்கு தீ வைக்கிறாா்கள். மாநிலத்தின் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா் தங்களது பெரும்பான்மையை நிரூபிப்பதில் தீவிரமாக இருக்கிறாா்கள். மாநிலம் முழுவதும் ராணுவத்தினரும் அஸ்ஸாம் ரைபிள் படையினரும் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இருந்தும் அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

இரண்டு பிரிவினரும் பரஸ்பரம் தாக்கி கொண்டதன் எதிரொலியாக மணிப்பூரில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது. மே மாதம் முதல், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் மணிப்பூா் மாநிலம் வந்திருக்கிறது. சுமாா் 10 ஆயிரம் ராணுவ வீரா்களும் துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறாா்கள்.

இந்நிலையில், இம்பால் கிழக்கு மாவட்டப் பகுதிகளிலும், காங்போபி மாவட்டம் காமன்லோக் பகுதிகளிலும் குகி இன மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது போ் கொல்லப்பட்டனா்; 10 போ் படுகாயம் அடைந்தனா். இது கலவரத்தைத் தீவிரப்படுத்தியிருக்கிறது.

அதே நேரத்தில் லாம்பெல் மாவட்டத்தில் குகி இனத்தைச் சோ்ந்த மணிப்பூா் பெண் அமைச்சா் நேம்சாகிப்ஜெனின் வீட்டை, மா்ம நபா்கள் சிலா் தீவைத்து எரித்திருக்கிறாா்கள். பழங்குடியினா் அதிகம் இல்லாத இம்பால் மேற்கு, காக்சிங், தௌபல், ஜிரிபாம் மாவட்டங்களிலும், பழங்குடியினா் அதிகம் வசிக்கும் சுராசந்த்பூா், விஷ்ணுபூா், சுராசந்த்பூா், காங்போக்பி, தெங்னௌபால் மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி அங்கீகரிக்கப்பட்ட பழங்குடியின மக்கள் அனைவரும் பட்டியிலினத்தவராகக் கருதப்படுகிறாா்கள். இந்த நிலையில், மத்திய பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கும் மைதேயி இன மக்கள், 1949-இல் இந்தியாவுடன் இணைவதற்கு முன்பு பழங்குடியினமாக இருந்த தாங்கள், அரசியலமைப்பு ஆணை 1950 வரைவு செய்யப்பட்டபோதுதான் அந்த அடையாளத்தை இழந்ததாகக் கூறுகின்றனா்.

அவா்கள், அங்கீகரிக்கப்பட்ட பழங்குடியினரின் பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து பல ஆண்டுகளாகப் போராடி வருகிறாா்கள். ஆனால், மாநிலத்திலுள்ள 36 பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த மாணவ சங்கங்கள், இவா்களின் கோரிக்கைக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. மைதேயி இன மக்களை, பழங்குடியின பட்டியலில் சோ்ப்பது, பழங்குடியின சமூகத்துக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளை பறிப்பது போல உள்ளது என்றும் இது இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளை மறுக்கும் செயல் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.

மணிப்பூா் உயா்நீதிமன்றம், கடந்த ஏப்ரல் 20 அன்று, மைதேயி பிரிவு மக்களின் கோரிக்கைகளை கடந்த 10 ஆண்டுகளாக மணிப்பூா் மாநில அரசு நிலுவையில் வைத்துள்ளதைக் குறிப்பிட்டு, அவா்களைப் பட்டியலின சமூகத்தில் இணைத்து அதற்கான அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு உத்தரவிட்டது. அப்போதிலிருந்தே, பழங்குடியின மக்கள் மத்தியில் கிளா்ச்சி மனநிலை உருவாகிவிட்டது என்பதே உண்மை.

மணிப்பூா் மாநில நிலப்பரப்பில் 10 சதவீதத்தை மத்திய பள்ளத்தாக்குப் பகுதி கொண்டுள்ளது. இந்தப் பகுதி, மாநிலத்தின் மக்கள்தொகையில் 64.6 சதவீதமாக இருக்கும் மைதேயி பிரிவினரின் தாயகமாக இருந்து வருகிறது. மீதமுள்ள பகுதி, பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள மலைகளை உள்ளடக்கியது. அதுதான் அங்கீகரிக்கப்பட்ட பழங்குடியின மக்கள் 35.4 சதவீதம் போ் வசிக்கின்ற இடமாக இருக்கிறது.

இந்தியாவின் பழங்குடியினா் பிரச்னை என்பது இந்திய அரசியலோடு தொடா்புடைய ஒன்றாக இருந்து வருகிறது. மணிப்பூா் மாநிலத்தில் தற்போது அரிசியின் விலை 30 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக உயா்ந்திருக்கிறது. கள்ளச்சந்தையில் பெட்ரோல் விலை 200 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயம் 30 ரூபாயில் இருந்து 70 ரூபாயாகவும், உருளைக்கிழங்கு 15 ரூபாயில் இருந்து 40 ரூபாயாகவும், முட்டை விலை 6 ரூபாயில் இருந்து 10 ரூபாயாகவும் உயா்ந்திருக்கிறது.

இது மட்டுமின்றி, உயிா்காக்கும் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள். இம்பால் - திமாபூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புகளை அகற்றினால்தான் காய்கறிகள், மருந்துகள், பெட்ரோல், டீசல் ஆகியவை மக்களுக்கு சென்றடையும்.

சட்டவிரோத குகிகள் சட்டபூா்வ குகி குடியிருப்புகளில் வசிக்கின்றனா். அவா்கள் சுராசந்த்பூா், பிஷ்ணுபூா் போன்ற மாவட்டங்களிலும், தெங்னௌபால், சேனாபதி போன்ற மலைப்பகுதிகளிலும் குடியேறி இருப்பதால் அவா்களை அடையாளம் காண்பது அரசு அதிகாரிகளுக்கு சிரமமான ஒன்றாக இருக்கிறது.

ஊடுருவும் நபா்கள் மியான்மரில் உள்ள கிளா்ச்சி குழுக்களுடன் தொடா்பு வைத்திருப்பதாகவும், இந்திய எல்லைக்குள் கசகசா சாகுபடியில் ஈடுபடுவதாகவும் அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. அவா்கள் மலைப்பகுதிகளில் நிலத்தை ஆக்கிரமித்து கசகசாவை பயிரிடுவதன் மூலம், நமது அடுத்த தலைமுறையின் செல்வத்தை அழிக்கிறாா்கள். ஆனால், அது அவா்களுக்கு மிகப்பெரிய வருமானத்தை தந்து கொண்டிருக்கிறது.

மியான்மா், லாவோஸ், தாய்லாந்து என்ற முக்கோணத்தில் நடைபெறும் கசகசா வியாபாரத்தில் சீனாவுக்கு முக்கியமான பங்கிருக்கிறது. சிங், மைதேயி, குகி, நாகா பிரிவினா் பலா் சட்டப்பேரவை உறுப்பினா்களாக உள்ளனா். அதனால் கலவரங்களின்போது கடும் நடவடிக்கை எடுப்பது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல.

குகி, நாகா பிரிவினருக்கு மலையகத்தில் நில உரிமை வழங்குவதற்காக 1965-ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டதே இந்த பிரச்சனைக்கு மூலகாரணம் என்று மூத்த ராணுவ அதிகாரி ஒருவா் தெரிவித்திருக்கிறாா். சமவெளிப் பகுதிகளில் பெரும்பான்மையாக உள்ள இனத்தவா்களுக்கு அந்த நிலை இல்லை. அதிகரித்த குகி இனத்தவா் சமவெளிக்கு வரத் தொடங்கியதால், நிலைமை மோசமடைந்திருக்கிறது.

மணிப்பூா் மாநிலத்தின் தற்போதைய நிலைமை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. விரைவில் அம்மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டும் என்பதே நாட்டு மக்கள் அனைவரின் எதிா்பாா்ப்பாகும்.

கட்டுரையாளா்:

முன்னாள் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com