குஜராத் தொங்கு பால விபத்து குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை இன்று (நா.1) ஆலோசனை மேற்கொண்டார்.
மோர்பி பால விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துடன் அதிகாரிகள் தொடர்பில் இருக்க வேண்டும் எனவும் அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை உடனடியாக செய்துகொடுக்க வேண்டும் எனவும் ஆலோசனையில் அறிவுறுத்தியுள்ளார்.
குஜராத் மாநிலம் மோா்பி பகுதியில் மச்சு நதியின் மீது அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் அதிக எடை காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அறுந்து விழுந்து விபத்து நேரிட்டது.
அப்போது பாலத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் நதியில் விழுந்தனர். இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்புப் படையினர் உடனடியாக செயல்பட்டு மீட்டனர்.
எனினும், இதுவரை இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை 135ஆக அதிகரித்துள்ளது. 17 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மோர்பி பால விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மீட்புப் பணிகள் குறித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் உதவிகள் குறித்தும் பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கினர்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துடன் அதிகாரிகள் தொடர்பில் இருந்து அவர்களுக்கு வேண்டியவற்றை செய்துகொடுக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.