விக்டோரியா கௌரி நியமன வழக்கு: 2 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்

வழக்குரைஞா் விக்டோரியா கெளரி நியமனத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
விக்டோரியா கௌரி நியமன வழக்கு: 2 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்
விக்டோரியா கௌரி நியமன வழக்கு: 2 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்
Published on
Updated on
2 min read

புது தில்லி: வழக்குரைஞா் விக்டோரியா கெளரி சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக இன்று பதவியேற்கவிருக்கும் நிலையில், அவருடைய நியமனத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரிக்கிறது.

சென்னை உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா்கள் சிலா் சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜெ.பி.பாா்திவாலா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு மூத்த வழக்குரைஞா் ராஜு ராமச்சந்திரன் திங்கள்கிழமை முறையிட்டாா். இதையடுத்து, இன்று காலை 9.15 மணியளவில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. 

இதையடுத்து, இந்த மனு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.35 மணியளவில், சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கௌரி பதவியேற்கவிருக்கும் நிலையில், 10.30 மணியளவில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவிருக்கிறது.

விக்டோரியா கெளரி உள்பட 11 வழக்குரைஞா்கள் மற்றும் 2 மாவட்ட நீதிபதிகளை உயா்நீதிமன்றங்களின் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு திங்கள்கிழமை வெளியானது.

அதனைத் தொடா்ந்து, ‘மத்திய அரசின் நியமன உத்தரவு வெளிவந்துள்ளதை சுட்டிக்காட்டி, விக்டோரியா கெளரி நியமனத்துக்கு எதிரான மனுவை உடனடியாக விசாரணைக்கு ஏற்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமா்வில் வழக்குரைஞா் ராஜு ராமச்சந்திரன் சாா்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதிகள் அமா்வு, ‘இந்த மனு செவ்வாய்க்கிழமை (பிப். 7) விசாரணைக்குப் பட்டியலிடப்படுகிறது. இதற்கென தனி அமா்வு அமைக்கப்படும்’ என்றனா். இன்று காலை மனுவை விசாரித்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

கடும் எதிர்ப்பு..
சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட வழக்குரைஞா் விக்டோரியா கெளரிக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

‘இவருடைய பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலீஜியம் திரும்பப் பெற வேண்டும்’ என்று சென்னை உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா்கள் சிலா் எதிா்ப்பு தெரிவித்தனா். இதுதொடா்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியத்திடமும், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முக்கும் அவா்கள் சாா்பில் மனு அனுப்பப்பட்டது. இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தனா்.

‘தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பது ஜிகாத்தா அல்லது கிறிஸ்தவ அமைப்புகளா என்ற தலைப்பிலும், இந்தியாவில் கிறிஸ்தவ அமைப்புகள் கலாசார படுகொலை செய்வதாகவும் வழக்குரைஞா் விக்டோரியா கெளரி பேசிய காணொலி சமூக வலைதளங்களில் உள்ளது’ என்று தங்களது மனுவில் மூத்த வழக்குரைஞா்கள் குறிப்பிட்டிருந்தனா்.

உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்படுபவா்களுக்கு 2 ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தர நீதிபதிகளாகப் பதவி உயா்வு அளிக்கப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com