
தில்லியில் புதன்கிழமை அதிகாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் மிக மோசமான விஷங்கள் குறித்து குற்றவாளி அர்ஜூன் இணையத்தில் தேடியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நெப் சராய் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ராஜேஷ், தனது மனைவி கோமல் மற்றும் மகள் கவிதா ஆகியோர் வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். இவர்களது கொலை தில்லியை உலுக்கிய நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், ராஜேஷ் மகன் அர்ஜுன் கைது செய்யப்பட்டார்.
ராஜேஷ் பெரும்பாலும் யாருடனும் அதிகம் பேச மாட்டார் என்றும் தனது வேலை உண்டு தானுண்டு என்று இருப்பார் எனவும், அவரைப் பற்றி அதிகம் தெரிந்தவர்கள், அவர் கொலை செய்திருப்பார் என்பதை நம்பவே மறுப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
முதலில், புதன்கிழமை அதிகாலை நடைப்பயிற்சி சென்று திரும்பிய மகன், குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக தகவல்கள் வெளியாகின. உண்மையில், இந்தக் கொலையை, அவர்களது மகன் அர்ஜுன்தான் மிகத் துல்லியமாக திட்டமிட்டு நடத்தியிருப்பதை கண்டுபிடித்த காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
மேலும் முதலில் தான் மிகவும் அப்பாவி போல நடித்ததாகவும், விசாரணையை திசைத்திருப்ப முயன்றதாகவும் அர்ஜூன் மீது குற்றம்சாட்டும் காவல்துறையினர், அவரது செல்போனை ஆய்வுக்குள்படுத்தியதில், அவர் கடந்த ஒரு சில நாள்களாக எவ்வாறு கொலை செய்வது என்பது குறித்தும், மிக மோசமான விஷம் மற்றும் சல்பாஸ் போன்ற வேதிப்பொருளைக் கொடுத்து கொலை செய்வது குறித்தும் அவர் இணையத்தில் தேடியிருக்கிறார்.
பிறகுதான், தனது தந்தையின் ராணுவ கத்தியை ஒரு சில நாள்களுக்கு முன்பே திருடி வைத்துக்கொண்டதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
அர்ஜுனை கைது செய்திருக்கும் காவல்துறையினர், அவர் தனது தந்தை ராஜேஷ் குமார் (51), அக்காவிடம் பாசம் காட்டுவது, தன்னை மற்றவர் முன்னிலையில் திட்டுவது போன்றவற்றால் மன அதிருப்தி அடைந்து இந்தக் கொலையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
அர்ஜுன், குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட முயன்றது, அவரது தந்தைக்குப் பிடிக்காததால், தொடர்ந்து தந்தை அர்ஜுனை பலரது முன்னிலையில் திட்டுவதும், மரியாதைக்குறைவாக நடத்துவதும் தொடர்ந்திருக்கிறது. இதனால், அர்ஜுனுக்கு தந்தை மீதான வெறுப்பு அதிகரித்து, அது நாளடைவில் கொலை செய்யும் அளவுக்கு அவரை மாற்றியிருப்பதாகக் கூறுகிறார்கள்.
அதாவது, கொலை செய்யும்போது கவிதா கத்தக்கூடாது என்பதற்காக முதலில் அவரது தொண்டையை அறுத்துள்ளார் அர்ஜுன். பிறகு தந்தை மீது இருந்த கடுமையான வெறுப்பினால் அவரது தலையில் கத்தியால் குத்தி தாக்கியிருக்கிறார். தந்தையைக் கொன்ற பிறகு மீண்டும் வந்து அக்காவைக் கொலை செய்திருக்கிறார். தாயையும் வெட்டிக்கொன்றிருக்கிறார். அவரது பலமான தாக்குதலில், மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியிருக்கிறார்கள்.
காட்டிக்கொடுத்த தடயம்
அதிகாலை நடைப்பயிற்சி சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, தனது குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டிருந்ததாக அவர் கூறிய நிலையில், வீட்டில் இருந்த கை கழுவும் இடத்தில் ரத்தக் கறையும் வீட்டின் சாவியில் இருந்த ரத்தக் கறையும்தான் அர்ஜூனை காட்டிக்கொடுத்திருக்கிறது.
அதன்பிறகே காவல்துறையினர் அவரிடம் உரிய முறையில் விசாரணை நடத்திய நிலையில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார்.
முதலில், காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்திய ஒரே விஷயம் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களில், கத்திக் குத்து காயம் இருந்த இடங்களைச் சுற்றிலும் துணிகளை வைத்து, ரத்தம் வெளியேறாத வகையில் தடுக்கப்பட்டிருந்தது. ஒரு வெளிநபர் கொலை செய்திருந்தால் இவ்வாறு செய்திருக்க வேண்டிய அவசியமில்லை.
அதுபோல, முதலில் அக்கா கவிதாவைக் கொலை செய்ய முயன்றுள்ளார். அவர் கத்திவிடக் கூடாது என்பதற்காக தொண்டையை மட்டும் அறுத்துவிட்டுள்ளார். அவர் உடலில் இருந்த காயங்களைப் பார்க்கும்போது, அவர் அர்ஜூனுடன் கடுமையாகப் போராடி இருப்பதைக் காட்டுவதாகக் காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள்.
கடந்த 1ஆம் தேதி கவிதாவின் பிறந்தநாள் அன்றும் அர்ஜூன் குடும்பத்தாருடன் சண்டைபோட்டு அவர்களை தாக்கியிருக்கிறார். அப்போது கவிதாவை கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதாக அக்கம்பக்கத்தினர் கூறுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.