ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிப்போம் என்ற வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகரில் ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"ஜம்மு-காஷ்மீருக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து தற்காலிகம்தான். அதன் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கும் வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறோம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஒரு யூனியன் பிரதேச அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள எங்களுக்கு நேரம் தேவைப்பட்டது. நாங்கள் ஏற்கனவே இந்த அரசுடன் தொடர்புடையவர்கள், ஆனால் ஜம்மு-காஷ்மீர் அரசு, முன்பு இருந்ததற்கும் தற்போது இருப்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.
இதையும் படிக்க | புத்தாண்டில் எடுக்க வேண்டிய டாப் 10 தீர்மானங்கள்!
நாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளுக்குக் கடமைப்பட்டுள்ளோம். சில வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான செயல்முறையைத் தொடங்கிவிட்டோம். மற்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து பெற வேண்டும்.
மக்களாகிய எங்களுக்கு மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று நம்புகிறோம். அதன்படி ஜம்மு-காஷ்மீருக்கு விரைந்து மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.
உச்ச நீதிமன்றமும் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை விரைந்து வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு ஓராண்டு ஆகிவிட்டது. இந்த ஒரு ஆண்டு போதுமானது என்று நினைக்கிறோம்.
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.