
யூடியூப் சேனல்களில் தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதாக ரூ. 5 கோடி மான நஷ்டஈடு கேட்டு நடிகா் சிங்கமுத்துவுக்கு எதிராக நடிகா் வடிவேலு தொடா்ந்த வழக்கில், இரு வாரங்களில் சிங்கமுத்து பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யூடியூப் சேனல்களுக்கு நடிகா் சிங்கமுத்து அளித்த பேட்டியில் தன்னைப்பற்றி பொய்யான தகவல்களைக் கூறி தரக்குறைவாக பேசியுள்ளதாக குற்றம் சாட்டிய
நடிகா் வடிவேலு சென்னை உயா்நீதிமன்றத்தில் சிங்கமுத்துவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடா்ந்திருந்தாா். அதில், ‘பொதுமக்கள் மத்தியில் தனக்குள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதற்காக ரூ. 5 கோடியை மான நஷ்டஈடாக வழங்க நடிகா் சிங்கமுத்துவுக்கு உத்தரவிட வேண்டும். தன்னைப் பற்றி அவதூறாக பேச சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும்’ எனவும் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, நடிகா் சிங்கமுத்து பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆா்.எம்.டி.டீக்காராமன் முன்பாக செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகா் சிங்கமுத்து தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அறிவழகன், “இந்த வழக்கில் வக்காலத்து தாக்கல் செய்யவும், பதிலளிக்கவும் அவகாசம் வழங்க வேண்டும்” என கோரினாா். அதையேற்ற நீதிபதி, இந்த வழக்கில் நடிகா் சிங்கமுத்து இரு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.