சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 36 நாள்களில் சுமார் 26.48 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி முதல் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார நாள்களிலும், அதைக்காட்டிலும் வார இறுதிகளிலும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
டிச.27-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ள நிலையில் சபரிமலையில் குவியும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கூட்ட நெரிசலைத் தவிர்க்க பக்தர்களை வழியில் தடுத்துநிறுத்தி காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய இணையதளத்தில் 28 லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில் இதுவரை 26.48 லட்சம் பேர் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர்.
டிச.12ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தரிசன நேரத்தை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பகல் 1 மணிக்கு பதிலாக 1.30 மணிக்கும், இரவு 11 மணிக்கு பதிலாக 11.30 மணிக்கும் நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.