பும்ராவுக்கு பந்துவீச்சு வழங்கப்பட்ட விதம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 31 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாதிடம் தோல்வியடைந்தது.
இந்த நிலையில், 13-வது ஓவர் வரையிலும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஒரேயொரு ஓவர் கொடுக்கப்பட்டது குழப்பமளிப்பதாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சில் செய்த சில மாற்றங்கள் என்னை குழப்பமடையச் செய்தது. ஆட்டத்தின் 4-வது ஓவரை ஜஸ்பிரித் பும்ரா வீசினார். அந்த ஓவரில் வெறும் 5 ரன்களை மட்டுமே அவர் விட்டுக் கொடுத்தார். அதன்பின் 13-வது ஓவர் வரை அவரை பந்துவீச்சில் பார்க்க முடியவில்லை. அப்போது சன் ரைசர்ஸ் 173 ரன்கள் எடுத்திருந்தது.
உங்களது அணியின் சிறந்த பந்துவீச்சாளருக்கு (பும்ரா) தொடர்ந்து பந்துவீச்சு வாய்ப்பளித்து விக்கெட் எடுக்க முயற்சித்திருக்க வேண்டும். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி அதை செய்யத் தவறிவிட்டார்கள். அதனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நன்றாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்றார்.