நடப்பு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி தாமதமாக களமிறங்க வருவதற்கான காரணத்தை சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். இருப்பினும், அவர் அணியில் தாமதமாக களமிறக்கப்படுவதால் ஒவ்வொரு போட்டியிலும் ரசிகர்கள் பலரும் ஏமாற்றமடைந்து வந்தனர். சில இக்கட்டான சூழலிலும் தோனி தாமதமாக களமிறங்கியது மேலும் இந்த விஷயத்தை பெரிதுபடுத்தியது.
இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி தாமதமாக களமிறங்க வருவதற்கான காரணத்தை சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: எம்.எஸ்.தோனியின் பணிச்சுமையை நாங்கள் குறைத்து வருகிறோம். நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் அவருக்கு சிறிய அளவில் தசைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. அவர் நீண்ட நேரம் பேட் செய்தால், அவர் அணியில் இடம்பெறாமல் போகும் அபாயம் உள்ளது. அதனால், அவரை ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக களமிறக்குகிறோம். ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் விளாசி தோனி சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்துவார். அவர் 9-வது வீரராக களமிறங்குவதால், ஆட்டத்தில் அவர் ஏற்படுத்தும் தாக்கத்தை குறைத்து மதிப்பிட்டுவிட வேண்டாம் என்றார்.
ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.