கரோனா பொதுமுடக்க அச்சம்: பொங்கல் பித்தளை பாத்திர ஆர்டர்கள் குறைந்ததால் தொழிலாளர்கள் தவிப்பு

கரோனா பொதுமுடக்க அச்சத்தால் நிகழாண்டில் பொங்கல் பித்தளை பாத்திர ஆர்டர்கள் குறைந்ததால் பட்டறை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் தவித்து வருகிறார்கள்.
திருநெல்வேலி அருகே பழையபேட்டையில் பித்தளை பாத்திரங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
திருநெல்வேலி அருகே பழையபேட்டையில் பித்தளை பாத்திரங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

திருநெல்வேலி: கரோனா பொதுமுடக்க அச்சத்தால் நிகழாண்டில் பொங்கல் பித்தளை பாத்திர ஆர்டர்கள் குறைந்ததால் பட்டறை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் தவித்து வருகிறார்கள்.

தமிழர்களின் பாரம்பரிய பாத்திரங்களில் பித்தளைக்கு தனி முக்கியத்துவம் உண்டு. பண்டிகை, கோயில் விழாக்களில் பித்தளை பாத்திரங்களில் பொங்கலிடுவது புனிதமாகப் போற்றப்படுகிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் சீர்வரிசையிலும், தாய்மாமன் சீர், பெண் வீட்டு சீர் வரிசையிலும் பித்தளைப் பாத்திரங்களே முன்வரிசையில் உள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் பித்தளை பாத்திர உற்பத்தி நூற்றாண்டுகளைக் கடந்து முத்திரை பதித்து வருகிறது. இம்மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள வாகைகுளம் பித்தளை விளக்குகளும், பழையபேட்டை பட்டறைகளில் பித்தளை பாத்திரங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பழையபேட்டையில் 50-க்கும் மேற்பட்ட பித்தளை பாத்திர பட்டறைகள் உள்ளன. குடம், பானை, உருளி, பானா, தவளைபானை, எம்.எஸ்.பானை, வாளி, குவளை, குத்துப்போனி, அண்டா, சர்வம், மைசூர்அடுக்கு, குண்டான், காபிசட்டி, பீப்பா, நாளிசெட், அப்பள டப்பா உள்பட 80-க்கும் மேற்பட்ட பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் பொங்கல் பண்டிகைக்கான உருளி பானைகளே 90 சதவிகிதம் தயாரிக்கப்படுகின்றன.

நிகழாண்டிலும் பொங்கல் பண்டிகையை கருத்தில் கொண்டு பித்தளை பாத்திர உற்பத்தி வேகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஒமைக்ரான் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக புத்தாண்டுக்கு பின்பு பொதுமுடக்கம் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் பெரிய பாத்திர கடைகள் அனைத்தும் ஆர்டர்களை குறைத்துள்ளதால் பட்டறை உரிமையாளர்களும், தொழிலாளர்களும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து பித்தளை பாத்திர பட்டறை தொழிலாளி ஒருவர் கூறுகையில், பழையபேட்டையில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பித்தளை பாத்திர உற்பத்தி நடைபெற்று வருகிறது. திருப்பூர், ஈரோடு பகுதிகளில் இருந்து செவ்வக வடிவ பித்தளை பிளேட்கள் வாங்கப்படுகின்றன. முதலில் அதனை கட்டிங் தொழிலாளிகள் வெட்டும் பணியில் ஈடுபடுகிறார்கள். சட்டைகளுக்கு அளந்து வெட்டுவது போல ஒவ்வொரு பொருளுக்கும் வெவ்வேறு அளவில் பிளேட்களை வெட்ட வேண்டும். பின்னர் பிளேட்கள் பொருள்களுக்கு ஏற்றவாறு ஒட்டப்படும்.

மூன்றாவதாக ஈயம் பூசும் தொழிலாளர்கள் பூசத்தொடங்குவார்கள்.
பித்தளையை நேரடியாக பாத்திரமாக மாற்ற முடியாது. ஏனென்றால் பித்தளையில் தண்ணீர் மட்டுமே வைக்க முடியும். பால் உள்ளிட்ட இதர உணவுப் பொருள்களை தயாரித்தால் மனிதர்களுக்கு ஒவ்வாமையை உருவாக்கிவிடும். அதனால்தான் பித்தளை பாத்திரங்களின் உள்பகுதியில் ஈயம் பூசப்படுகிறது. வெள்ளி மற்றும் காரியம் ஆகியவற்றை சேர்த்து முதலில் ஈயம் உருவாக்கப்படுகிறது. அவை பாத்திரத்தின் உள்பகுதியில் பூசப்படுகிறது.

பித்தளை பொருள்களில் ஈயம் பூசும் பணி முடிந்ததும் அடிவேலை பணிக்கு அனுப்பப்படும். ஒரு பானை என்றால் முதலில் அதன் மேல்பகுதி வேலை முடிக்கப்படும். இறுதியாக அடிவேலைகள் செய்யப்படும். அந்தப் பணி முடிந்ததும் வெல்டர், ரன்னர்களுக்கு அனுப்பப்படும். அவர்கள் பானையின் உறுதித்தன்மைக்கு தேவையான வேலையை செய்வார்கள். இறுதியாக தேய்ப்பு மற்றும் பாலீஷ் பகுதிக்கு அனுப்பப்படும். அங்கு இரும்பின் உதவியோடு பித்தளை பொருள்கள் பாலிஷ் செய்யப்படும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பித்தளை பாத்திரம் மற்றும் விளக்கு தயாரிப்பில் 2,000 தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள். எவர்சில்வர் பாத்திர வருகைக்குப் பின்பு பித்தளை பொருள்கள் பயன்பாடு குறைந்துள்ளதால் வேலைவாய்ப்பும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் கரோனா பாதிப்பால் தொழில் முற்றிலும் முடங்கியது. நிகழாண்டில் பொங்கலை எதிர்பார்த்து உற்பத்தி தொடங்கப்பட்ட நிலையில், மீண்டும் ஆர்டர்கள் குறைந்துள்ளன என்றார்.

இதுகுறித்து பழையபேட்டையைச் சேர்ந்த ஆனந்த் கிருஷ்ணன் கூறுகையில், பழையபேட்டையில் உற்பத்தி செய்யப்படும் பொங்கல் பித்தளை பானைகள் தமிழகம் மட்டுமன்றி கர்நாடகம், கேரள மாநிலத்திற்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. முன்பைக் காட்டிலும் பித்தளை பொருள்களின் பயன்பாடு மிகவும் குறைந்துள்ளது. பொங்கல் பானைகள் மட்டுமே பாரம்பரியத்துடன் வாங்குகிறார்கள். வழக்கமாக செப்டம்பர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டுமே பொங்கல் பானைகள் அதிகம் உற்பத்தியாகும். சுமார் 20 ஆயிரம் பானைகள் வரை இங்கிருந்து ஏற்றுமதியாகும். ஆனால், அந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டில் கரோனா பொதுமுடக்கத்தால் உற்பத்தியும், ஏற்றுமதியும் முற்றிலும் தடைபட்டது.

நிகழாண்டில் தளர்வுகள் அதிகரிக்கப்பட்டதால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கோவை, சென்னை பகுதிகளில் இருந்து 60 சதவிகித ஆர்டர்கள் செய்தனர். இப்போது ஒமைக்ரான் அச்சுறுத்தலால் தங்களது ஆர்டர்களில் 20 சதவிகிதம் வரை குறைத்துவிட்டனர். அதனால் நாங்கள் உற்பத்தி செய்ய திட்டமிட்டு வாங்கிய பிளேட்கள் தேங்கும் நிலை உள்ளது. இதுதவிர இத் தொழிலை நம்பி வருவதற்கு இளைஞர்கள் தயாராக இல்லை. அதனால் தொழிலாளர் பற்றாக்குறையும் அதிகம் உள்ளது. பித்தளை பாத்திரங்களின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருங்காலங்களில் பித்தளை பொருள்களின் தேவை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com