தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவந்த நிலையில், தற்போது மழை பொழிவு குறைந்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில், மழை நீர் தேங்கிய நிலையில், அரசின் நடவடிக்கை காரணமாக அது அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், சில இடங்களில் தேங்கிய தண்ணீரை அப்புறப்படுத்தும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
அதே சமயம், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில், சென்னை திரு.வி.க.நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட சங்கர பக்தன் தெரு, கொன்னூர் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரனப் பொருள்களை வழங்கினார்.
அப்போது, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் தாயகம் கவி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசின் உயர் மட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
பின்னர், தனது சொந்த கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மைலப்பா தெரு, நேரு மண்டபப் பகுதியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்.
வில்லிவாக்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட லாக்மா நகரில் கரோனா தடுப்பூசி மற்றும் மழைக்கால சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.