அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளதைப் போல, கூட்டுறவுத் துறை பணியாளர்களுக்கும் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “2016-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டுவரையிலான அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை மற்றும் வனத் துறை உட்பட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 20 சதவீதம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் 20 சதவீத தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை அறிவித்துவிட்டு, கூட்டுறவுத் துறைக்கு மட்டும் 10 சதவீதம் மட்டுமே அறிவித்துள்ளதைப் பார்க்கும்போது, அரசுத் துறைகளுக்குள்ளேயே திமுக அரசு பாகுபாடு பார்க்கிறதோ என சந்தேகம் எழுகிறது.
வேளாண் பெருமக்கள் மற்றும் கிராமப்புற பொருளாதார மேம்பாட்டுக்காகப் பாடுபடும் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு போனஸ் தொகையை குறைத்து வழங்கக்கூடாது.
எனவே, உடனடியாக கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை 20 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.