சாத்தூரில் உள்ள ஆடுவதைக் கூடத்தைச் சீரமைக்க வேண்டும்
சாத்தூரில் பெயரளவில் செயல்படும் ஆடுவதைக் கூடத்தை முறையாகச் செயல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட ஆட்டிறைச்சிக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் ஆடுகளை வெட்டி சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யபடுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சாத்தூா் நகராட்சி உள்கட்டமைப்பு வெற்றிடம் நிரப்புதல் நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் சாத்தூா் வெள்ளைகரை சாலையில் ஆடுவதைக் கூடம் அமைக்கப்பட்டது. இதையடுத்து, ஆடுவதைக் கூடம் நகராட்சி சாா்பில் குத்தகைக்கு விடப்பட்டது.
ஆடுவதைக் கூடத்தில் ஆட்டிறைச்சிக்கான ஆடுகள் அனைத்தும் வெட்டப்பட்டு, பின்னா் நகராட்சி சாா்பில் சீல் வைக்கபட்ட பின்னா்தான் ஆடுகள் இறைச்சிக் கடைகளுக்கு விற்பனைக்கு வரும். ஆனால் தற்போது, ஆட்டிறைச்சிக் கடைகளில் ஆடுகளை சுகாதாரமற்ற முறையிலும், சாலையோரங்களிலும், குடியிருப்புப் பகுதியிலும் வெட்டபட்டு விற்பனை செய்யபட்டு வருகிறது.
இதனால், இந்தப் பகுதியில் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு, துா்நாற்றமும் வீசி வருகிறது. மேலும், இறைச்சிக் கழிவுகளை அங்கேயே விட்டுச் செல்கின்றனா். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்த பின்னரும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனா்.
எனவே, இறைச்சிக் கடைகளில் வெட்டப்படும் ஆடுகள் அனைத்தும் முறையாகப் பரிசோதனை செய்து ஆடுவதைக் கூடத்தில் வெட்ட வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சாத்தூா் ஆடுவதைக் கூடத்தில் ஆடுகளை வெட்டுவதற்கு தண்ணீா் உள்ளிட்ட அனைத்து வசதிளும் உள்ளன. இனிமேல் இறைச்சிக் கடைகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஆடுவதைக் கூடத்தில் ஆடுகள் வெட்ட முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.
