
குயில் மிகவும் இனிமையான ஓசையை எழுப்பும் ஒரு பறவை இனமாகும். இந்த இனிமையான ஓசையை எழுப்புவது பெண் குயில்கள் அல்ல; உண்மையிலேயே பெண் குயிலைவிட ஆண் குயில்களேமிகவும் இனிமையாக கூவும் இயல்புடையவை.
ஆண் குயில்கள் கிட்டத்தட்ட 15 விதமாக ஒலி எழுப்பும் தன்மை உடையவை. ஆண் குயில்கள் பெண் குயில்களை ஈர்ப்பதற்காகவே இத்தகைய ஒலியை எழுப்புகின்றன. அதிலும், குறிப்பாக, ஆண் குயில்கள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை தொடர்ச்சியாக ஒலி எழுப்பும் தன்மை உடையவையாகும்.
ஆண் குயில் எழுப்பும் இசையால் கவரப்படும் பெண் குயில்கள் ஆண் பறவையோடு இணை சேர்கின்றன. அதன்பிறகு பெண் குயில்கள் முட்டையிடத் தொடங்கும். முட்டையிடத் தொடங்கும் காலமானது மற்ற பறவைகளைப் போல் அல்லாமல் கிட்டத்தட்ட நான்கு மாத காலம் நீடிக்கிறது. பெண் குயிலானது ஒரு முட்டையை இடுவதற்கும் மற்றொரு முட்டையை இடுவதற்குமான கால இடைவெளி மிகவும் அதிகம்.
அதனால் பெண் குயிலுக்கு முட்டையிட்டு அடைகாப்பது என்பது இயலாத காரியம். அதையும் தாண்டி அதன் உடல் அமைப்பிலேயே குயில்களுக்கு கூடு கட்டும் தன்மை இல்லை என்றும் சொல்லலாம். எனவே முட்டையிட்டு அதனை அடை காப்பதற்கான சூழல் இல்லாததால், தான் இடும் முட்டைகளை ஏதேனும் ஒரு காகத்தின் கூட்டில் குயில்கள் இடுகின்றன. குயில்களின் முட்டையும் காகத்தின் முட்டையும் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரியே இருக்கும். இதனால் காகம் முட்டையைப் பற்றி ஆராய்வதில்லை.
குயில்களின் இனப் பெருக்க காலமும் காகங்களின் இனப் பெருக்க காலமும் கிட்டத்தட்ட சமமான காலத்திலேயே நிகழும். எனவே, குயில்கள் முட்டையிடும் பருவம் தொடங்கியதும் ஆண் குயில்கள் காக்கையின் கூடுகளைத் தேடி அலையும். அவ்வாறு காக்கையின் கூடுகளைத் தேடி கண்டுபிடித்தவுடன் அடைகாக்கும் காகத்தை ஆண் குயிலானது சீண்டி கூட்டில் இருந்து வெளியேற்றும்.
கோபம் கொண்ட பெண் காகமானது ஆண் குயிலை துரத்தும்போது, பெண் குயிலானது காக்கையின் கூட்டில் சென்று முட்டைகளை இட்டுவிட்டு வந்துவிடும். இதேபோன்று ஒரே காகத்தின் கூட்டில் கிட்டத்தட்ட மூன்று முதல் நான்கு குயில்கள் கூட தங்களது முட்டைகளை இட்டு விடும்.
குயில்களின் முட்டையானது கிட்டத்தட்ட 27 நாள்களில் பொரிக்கத் தொடங்கி முட்டை உடைந்து குஞ்சுகள் வெளியேறத் தொடங்கும். அப்பொழுது வெளிவரும் குஞ்சுகளை காகம் இரையூட்டி பாதுகாத்து வரும்.
மெதுவாக, இறக்கைகள் முளைக்கும்போது குஞ்சுகளில் வேறுபாடு தெரிய ஆரம்பிக்கும். அதிலும், குறிப்பாக ஆண் குயில்கள் கிட்டத்தட்ட கருப்பு நிறத்தில் காக்கைகளைப் போன்றே இருக்கும். ஆனால் பெண் குயிலின் வண்ணமோ பழுப்பு நிறத்தில் புள்ளி புள்ளியாக இருக்கும்.
எனவே அது தனது குஞ்சு இல்லை என்பதை காகம் எளிதில் அடையாளம் கண்டு, அதனை தனது கூட்டில் இருந்து கீழே தள்ளிவிடும். கீழே விழும் பெண்குஞ்சு குயில் தட்டுத்தடுமாறி உயிர் போராட்டத்தில் சிக்கி தன்னை தற்காத்துக் கொள்வதே அதற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
காக்கையின் கூட்டில் உள்ள ஆண்குஞ்சு குயிலானது கிட்டத்தட்ட ஒரு மாத காலம் வரை காக்கைகளைப் போன்றே குரல் எழுப்பும். அது வளர்ந்து கூட்டைவிட்டு பறந்து வெளியே செல்லும்போதுதான் மீண்டும் குயில்களைப் போல கூவத் தொடங்கும் பறவைகள் ஆய்வாளர் சலீம் அலி எழுதியபடி, இந்த மாதிரி பறவைகள் வனப் பகுதியில் நிறைய இருக்கின்றன.
- வாட்ஸ் ஆஃபிலிருந்து
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.