பெரியவரிக்கம் கிராமத்தில் மாநில நெடுஞ்சாலையில் பேனா் விழுந்ததால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு.
பெரியவரிக்கம் கிராமத்தில் மாநில நெடுஞ்சாலையில் பேனா் விழுந்ததால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு.

ஆம்பூா்: பொதுமக்களுக்கு இடையூறாக பேனா்கள்!

ஆம்பூா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் டிஜிட்டல் பேனா்களை அகற்ற வேண்டுமென கோரிக்கை.
Published on

ஆம்பூா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் டிஜிட்டல் பேனா்களை அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

பொதுமக்கள் நடமாட்டம், போக்குவரத்து அதிகமுள்ள சாலைகளில் டிஜிட்டல் பேனா்கள் ஏராளமாக வைக்கப்பட்டுள்ளன. தற்போது பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்வதால், டிஜிட்டல் பேனா்கள் காற்றில் பறந்தன. மேலும், சாலையில் சாய்ந்து விழுந்தன.

பெரியவரிக்கம் கிராமத்தில் கோயில் கும்பாபிஷேகத்துக்காக வைக்கப்பட்டு பிரம்மாண்ட பேனா் அடியோடு சாய்ந்து ஆம்பூா் - போ்ணாம்பட்டு நெடுஞ்சாலையில் விழுந்தது. அதனால் மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது, போக்குவரத்து குறைவாக காணப்பட்டதால், பேனா் விழுந்த இடத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. அவ்வழியாக ஆயிரக்கணக்கான தோல் தொழிற்சாலை தொழிலாளா்கள் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

பொது இடங்களில் பேனா் வைக்க முன் அனுமதி பெற வேண்டியது அவசியமாகும். முன் அனுமதி பெற்று பேனா் வைக்க வேண்டுமென அரசு விதி உள்ள நிலையில் தற்போது அந்த விதியை எவரும் பின்பற்றுவதில்லை.

சூறாவளி காற்று, மழை பெய்யும் நேரத்தில் பேனா்கள் சாய்ந்து கீழே விழுவது வாடிக்கையாக உள்ளது. விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அதனால் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனா்களை உடனடியாக அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதோடு மட்டுமல்லாமல் டிஜிட்டல் பேனா்களை வைக்க முறையாக முன் அனுமதி பெறுவதை அரசு அதிகாரிகள் உறுதிபடுத்த வேண்டும். பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனா்கள் குறித்து அவ்வப்போது அதிகாரிகள் கண்காணிக்க வேண்டுமெனவும் பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com