கோயில்களில் அர்ச்சகர்களாக தாழ்த்தப்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளதற்காக கேரள அரசுக்கு கர்நாடக மாநில திராவிடர் கழகம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக மாநில திராவிடர் கழகத் தலைவர் மு.சானகிராமன் வெளியிட்ட அறிக்கை:
சமுதாயத்தில் நிலவிய சமனின்மையை போக்க பல்வேறு சீர்த்திருத்தங்களைச் செய்த தந்தை பெரியார், கோயில் கருவறையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததோடு, அது நிறைவேறாமல் இருப்பது தனது நெஞ்சில் முள்ளாக தைத்திருப்பதாக தெரிவித்தார்.
இதை உணர்ந்த முந்தைய திமுக அரசு, அனைத்து ஜாதியினரும் அச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை கொண்டுவந்தது. இந்த சட்டத்திற்கு ஒருசிலரால் நீதிமன்ற தடைபெறப்பட்டது. இதனால் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் முடங்கியுள்ளது. நீதிமன்ற தடையை நீக்கி அனைத்துஜாதினரும் அர்ச்சகராகலாம் என்ற நிலையை உருவாக்க திராவிடர்கழகம் தொடர்ந்துபோராட்டத்தில் ஈடுபட்டுவந்துள்ளது.
இந்நிலையில், கேரளத்தில் கோயில்களில் அர்ச்சகர்களாக தாழ்த்தப்பட்டோரை நியமித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற நிலையை உருவாக்கியதற்காக கேரளமாநில அரசுக்கும், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.