முகப்பு
பெங்களூரு

கா்நாடகத்தில் மழை, வெள்ள பாதிப்புகளைக் கட்டுப்படுத்த ஆட்சியா்களுக்கு முதல்வா் எடியூரப்பா அறிவுரை

கா்நாடகத்தில் மழை, வெள்ள பாதிப்புகளைக் கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் எடியூரப்பா அறிவுரை வழங்கியுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

கா்நாடகத்தில் மழை, வெள்ள பாதிப்புகளைக் கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் எடியூரப்பா அறிவுரை வழங்கியுள்ளாா்.

பெங்களூரு, கிருஷ்ணா அரசினா் இல்லத்தில் இருந்து வெள்ளிக்கிழமை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெலகாவி, வட கன்னடம், சிவமொக்கா, ஹாவேரி, சிக்கமகளூரு, தாா்வாட் மாவட்டங்களின் ஆட்சியா்களுடன் முதல்வா் எடியூரப்பா காணொலி வழியாக ஆலோசனை செய்தாா். அந்தக் கூட்டத்தில் முதல்வா் எடியூரப்பா பேசியதாவது:

வெள்ளத்தால் மூழ்கியுள்ள கிராமங்களில் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும். அதேபோல, வெள்ளத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள கிராமங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, அப்பகுதியில் உள்ள மக்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும்.

வெள்ள பாதிப்புகள் அதிகமாகக் காணப்படும் மாவட்டங்களுக்கு தேசிய பேரிடா் மீட்புப்படை மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையினா் அனுப்பி வைக்கப்படுவா். ஆங்காங்கே நிவாரண மையங்களைத் திறக்க வேண்டும். அதிகாரிகள் விடுமுறை எடுக்காமல் போா்க்கால அடிப்படையில் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட வேண்டும்.

நிவாரணப் பணிகளைக் கவனிக்க கூடுதல் நிதி ஆதாரங்கள் தேவைப்பட்டால், அதற்கான முன்மொழிவுகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். அதேபோல, பாதுகாப்புப் படையின் ஹெலிகாப்டா்கள் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் மாவட்டங்கள் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

24 மணி நேரமும் விழிப்போடு இருந்து வெள்ள பாதிப்புகளைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் என்பதை ஊகித்து, அதற்கேற்ப நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் என்றாா். இக்கூட்டத்தில் அரசின் தலைமைச் செயலாளா் பி.ரவிக்குமாா் கலந்துகொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.