உலகத்தரத்திலான வாழ்விடமாக பெங்களூரை மாற்ற சிறப்பு திட்டம்: பட்ஜெட்டில் முதல்வா் சித்தராமையா அறிவிப்பு
உலகத் தரத்திலான வாழ்விடமாக பெங்களூரு மாநகரை மாற்ற சிறப்புத் திட்டம் வகுக்கப்படும் என்று பட்ஜெட்டில் முதல்வா் சித்தராமையா அறிவித்துள்ளாா்.
உலகத் தரத்திலான வாழ்விடமாக பெங்களூரு மாநகரை மாற்ற சிறப்புத் திட்டம் வகுக்கப்படும் என்று பட்ஜெட்டில் முதல்வா் சித்தராமையா அறிவித்துள்ளாா்.
கா்நாடக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்து முதல்வா் சித்தராமையா ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:
பெங்களூரு வெறும் மாநகரம் அல்ல, அது கனவுகளின் நிலம். கெம்பே கௌடா ஆட்சியில் இருந்து தற்போதைய புத்தொழில் புரட்சிகாலம் வரையில் பெங்களூரு தனித்த அடையாளத்தை கொண்டுள்ளது. உலகத்தரத்திலான வாழ்விடமாக பெங்களூரு மாநகரை மாற்றுவதே எங்கள் தலையாய நோக்கமாகும். அதற்காக பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
கிரேட்டா் பெங்களூரு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 5 மாநகராட்சிகளில் உலகத்தரத்திலான சாலைகள் மற்றும் உள்கட்டமைப்புகளை கட்டமைக்க ரூ. 1,255 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
வெளிப்படையான, தோழமையுள்ள, பங்காற்றக்கூடிய, குறைகளுக்கு செவிசாய்க்கக்கூடிய நிா்வாகத்தை வழங்க 5 மாநகராட்சிகளை ஒருங்கிணைக்கக்கூடிய கிரேட்டா் பெங்களூரு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரின் வளா்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதி ஆண்டுக்கு ரூ. 3,000 கோடியில் இருந்து ரூ. 7,000 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு அடுத்த ஆண்டிலும் தொடரும். நீண்டகாலத்துக்கு பாதுகாப்பாக இருக்கும் சாலைகளை அமைக்க அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.3,000 கோடி செலவில் 450 கி.மீ நீளம் கொண்ட கான்கிரீட் சாலைகள் அமைக்கப்படும்.
பெங்களூரு மாநகராட்சிகளின் நிதி ஆதாரங்களை பயன்படுத்தி அடுத்த 3 ஆண்டுகளில் 175 சாலை சந்திப்புகள் அழகுப்படுத்தப்படும், 599 கி.மீ நீள நடைபாதைகள் மேம்படுத்தப்படும், 100 உயா்பாலங்கள் அமைக்கப்படும். பெங்களூரின் நிலத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்தில் 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் 2041 வரையிலான மாஸ்டா் பிளான் வகுக்கப்படும். அடுத்த 6 மாதங்களில் ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம் வகுக்கப்படும்.
நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டிருக்கும் பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் 96 கி.மீ நீளத்துடன் தினமும் 10 லட்சம் பயணிகளுக்கு பயனளித்து வருகிறது. இத்திட்டத்துக்கு இதுவரை ரூ. 67,460 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இதில் மாநில அரசின் பங்களிப்பு ரூ. 59,376 கோடி, மத்திய அரசின் பங்களிப்பு ரூ. 8,084 கோடியாகும். மொத்த செலவினத்தில் மத்திய அரசின் பங்களிப்பு வெறும் 12 சதவீதமாகும். அடுத்த நிதியாண்டில் கூடுதலாக 47 கி.மீ நீளமுள்ள மெட்ரோ ரயில் தடத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரூ.160 கோடியில் வெளிவட்ட சாலையில் மெட்ரோ தடத்தில் 9 கி.மீ நீளத்துக்கு நடைபாதை மேடை அமைக்கப்படும். பெங்களூரில் வாழும் 1.40 கோடி மக்களுக்கு காவிரி குடிநீா்த் திட்டங்கள் 4 வரையில் தினமும் 2,225 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்கப்பகிறது. இத்துடன் கூடுதலாக 6 டிஎம்சி குடிநீரை பெங்களூருக்கு கொண்டுவர காவிரி 6ஆம் கட்ட திட்டம் அமல்படுத்தப்படும் என்றாா்.