கோலார் தங்கவயல் பவரிலால் பேட்டையில் மழை நீர் வெள்ளம் வீடுகளில் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
கடந்த சில தினங்களாக கோலார் தங்கவயலில் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், ராபர்ட்சன்பேட்டை நாலாவது பிளாக் மற்றும் பவரிலால் பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை வெள்ளம் வீடுகளில் புகுந்து தேங்கி விடுகிறது. சீரான கழிவு நீர் கால்வாய் வசதி இல்லாத இந்த பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் இரவு முழுவதும் அப் பகுதி மக்கள் அவதிப்பட்டனர்.
தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ. ரூபா சசிதர் பவரிலால் பேட்டைக்கு சனிக்கிழமை நேரில் சென்று மழை நீர் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். அப்போது, பல ஆண்டுகளாக மழை பெய்யும் போதெல்லாம் மழை வெள்ளம் வீட்டுக்குள் புகுந்து அவதி படுகிறோம். தகுந்த நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று அப் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதையடுத்து, அங்கு அடைப்பட்டுக் கிடந்த கழிவுநீர் கால்வாய்களை உடனே சீரமைக்க நகரமன்ற ஆணையர் ஸ்ரீகாந்துக்கு எம்.எல்.ஏ. உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து நகரமன்ற பணியாளர்கள் கழிவு நீர் கால்வாய் அடைப்புகளை சீர்படுத்தினர்.