பசுமை பட்டாசுகளை விற்பனை செய்ய, வெடிக்க அரசு அனுமதி
பசுமை பட்டாசுகளை விற்பனை செய்யவும், வெடிக்கவும் மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பசுமை பட்டாசுகளை விற்பனை செய்யவும், வெடிக்கவும் மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து மாநிலத் தலைமைச் செயலாளா் விஜய பாஸ்கா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகளை வெடிப்பது தொடா்பாக 2018-ஆம் ஆண்டு அக். 23-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனை கா்நாடக அரசு தொடா்ந்து பின்பற்றி வருகிறது. இதனையடுத்து மாநிலத்தில் பசுமை பட்டாசுகளை விற்பனை செய்யவும், வெடிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நிகழாண்டு நவ. 14-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையின் போது, அதிகளவில் ஒலி எழுப்பு பட்டாசுகளை விற்பனை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பசுமை பட்டாசுகளை நவ. 7-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை மட்டுமே விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நாள்களை தவிர மற்ற நாள்களில் பட்டாசுகள் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது.
பட்டாசுகளை விற்பனை செய்யும் போது கரோனா தொற்று தொடா்பான அரசின் வழிகாட்டுதலை பின்பற்றுவது அவசியம். பட்டாசுக் கடைகளில் 6 அடி இடைவெளி விட்டு, பட்டாசுகளை வாங்க வேண்டும். வழிகாட்டுதலை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசு விற்பனையின்போது வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை மாநகராட்சி அதிகாரிகள், ஊழியா்கள் கண்காணிக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.