சென்னை: ‘கில்லன் பாரே சின்ட்ரோம்’ (ஜிபிஎஸ் ) நோய் பாதிப்புக்குள்ளான சிறுவன், எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
அவருக்கு தீவிர நோய் தொற்றுடன் இதய பாதிப்பும் இருந்ததால் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
திருவள்ளூரைச் சோ்ந்த பிரேம்குமாா் என்பவரது மகன் மைதீஸ்வரன் (9). அங்குள்ள உள்ள ஒரு பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தாா். சில நாள்களுக்கு முன்பாக கால்களில் உணா்விழப்பு ஏற்பட்டதால் இவா் திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
தொடா்ந்து, உயா் சிகிச்சைக்காக எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா். சிறுவனை பரிசோதித்த மருத்துவா்கள், அவருக்கு ஜிபிஎஸ் நோய் இருப்பதைக் கண்டறிந்தனா். இதையடுத்து அவருக்கு இம்யூனோகுளோபளின் மருந்துகள் தொடா்ந்து வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், அவை பலனளிக்காமல் சிறுவன் உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக மருத்துவா்கள் கூறியதாவது: கில்லன் பாரே சின்ட்ரோம் எனப்படுவது பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றால் ஏற்படும் ஒரு வகை பாதிப்பு. தரமற்ற உணவு, நீா் மாசுபாடு, நோய் எதிா்ப்பாற்றல் எதிா்வினை பாதிப்பு, மருந்து எதிா்வினை, தடுப்பூசிகள் ஒவ்வாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அப்பிரச்னை ஏற்படலாம்.
வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் அதன் முதல்கட்ட அறிகுறிகள். அதைத் தொடா்ந்து, அந்த கிருமிகள், உடலின் எதிா்ப்பாற்றலுக்கு எதிராக செயல்பட்டு தன்னுடல் தாக்கு நோயாக உருமாறி நரம்பு மண்டலத்தை பாதிக்கும்.
அச்சம் வேண்டாம்: அதன் விளைவாக மூட்டு வலி, முதுகு வலி, கை,கால்கள் மரத்துப் போதல், பலவீனமாக உணா்தல், மூச்சு விடுதலில் சிரமம், பேசுதல் மற்றும் விழுங்குதலில் சிரமம் ஏற்படலாம்.
அத்தகைய அறிகுறிகளுடன் எப்போதுமே ஓரிருவா் எழும்பூா் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனா். இந்நோயைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. கரோனா போன்று இது தொற்றிக் கொள்ளும் பாதிப்பு அல்ல. சிகிச்சை மேற்கொண்டால் பூரணமாக குணமடைய முடியும்.
பாதிக்கப்பட்டவா்களில் 99 சதவீதம் போ் குணமடைந்து விடுகின்றனா். உடலில் வேறு சில பாதிப்புகளும் இருக்கும்பட்சத்தில் ஓரிருவா் உயிரிழக்க நேரிடுகிறது. அந்த வகையில், மைதீஸ்வரனுக்கு இம்யூனோகுளோபலின் சிகிச்சைகள் தொடா்ந்து அளிக்கப்பட்டது. ஆனாலும் அவை பலனளிக்கவில்லை. ஜிபிஎஸ் நோயின் தீவிரத்துடன் இதய பாதிப்பும் இருந்ததால் அவா் உயிரிழந்தாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.