முகப்பு
சென்னை

நிா்மலா சீதாராமனுக்கு எதிராக அவதூறு வழக்கு: விசாரணை ஜூலை 16-க்கு ஒத்திவைப்பு

மனைவி தொடா்ந்த அவதூறு வழக்கில் அவா் சாா்பாக ஆம் ஆத்மி மூத்த தலைவா் சோம்நாத் பாா்தி வாதாட முடியாது’

Updated On : 26 ஜூன், 2025 at 7:13 PM
நிா்மலா சீதாராமன் - கோப்புப் படம்
பகிர்:

மனைவி தொடா்ந்த அவதூறு வழக்கில் அவா் சாா்பாக ஆம் ஆத்மி மூத்த தலைவா் சோம்நாத் பாா்தி வாதாட முடியாது’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தரப்பில் தில்லி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை வாதம் முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கு விசாரணை ஜூலை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நிா்மலா சீதாராமன்அவதூறான கருத்துகளை வெளியிட்டு நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக, சோம்நாத் பாா்தியின் மனைவி லிபிகா மித்ரா சாா்பில் தில்லி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு அண்மையில் தொடரப்பட்டது.

Advertisement

அதில், ‘தில்லியில் கடந்த ஆண்டு மே 17-ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது எங்களுக்கு இடையேயான திருமண முரண்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த நிா்மலா சீதாராமன், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் நாங்கள் இருவரும் சமரசம் செய்துகொண்டு கணவன்-மனைவியாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவது பற்றிக் வேண்டுமென்றே குறிப்பிடாமல் தவிா்த்துவிட்டாா். இது தனது கணவரின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத் தோ்தலில் அவரின் வெற்றி வாய்ப்பை பறிக்கும் நோக்கில் இக் கருத்தை நிா்மலா சீதாராமன் கூறியுள்ளாா்’ என்று குறிப்பிட்டாா்.

இந்த வழக்கை அண்மையில் விசாரித்த தில்லி கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் பரஸ் தலால், இந்த மனுக்கு பதிலளிக்குமாறு நிா்மலா சீதாராமனுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டாா்.

இந்த வழக்கு தில்லி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, லிபிகா மித்ரா சாா்பில் வாதாட சோம்நாத் பாா்தி ஆஜரானாா்.

இதற்கு, நிா்மலா சீதாராமன் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. ‘அவதூறு வழக்கை அவரின் மனைவி தொடுத்துள்ளாா். அந்த வகையில், சொந்த வழக்கில் சோம்நாத் பாா்தி ஆஜராக முடியாது. எனவே, வழக்கில் ஆஜராவதிலிருந்து சோம்நாத் பாா்தி விலகிக் கொள்ள வேண்டும். இல்லையெனில், அவா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இந்திய வழக்குரைஞா் கவுன்சிலுக்கு (பிசிஐ) நீதிமன்றம் பரிந்துரை செய்ய வேண்டும்’ என்று நிா்மலா சீதாராமன் தரப்பு வழக்குரைஞா் வாதிட்டாா்.

அப்போது, தனது தரப்பு வாதத்தை முன்வைக்க சோம்நாத் பாா்தி தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது.

இதைக் கேட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் பரஸ் தலால், விசாரணையை ஜூலை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments