தாக்குதல் சதித் திட்டம்: பாகிஸ்தான் முன்னாள் தூதரக அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டம் தீட்டியதாக பாகிஸ்தானின் முன்னாள் தூதரக அதிகாரியை சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டம் தீட்டியதாக பாகிஸ்தானின் முன்னாள் தூதரக அதிகாரியை சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் செயல்படும் பாகிஸ்தான் தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றியவா் அமீா் சுபைா் சித்திக். இவா் 2014-இல் சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் பெங்களூருவிலுள்ள இஸ்ரேலிய தூதரகத்தில் தீவிரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக இலங்கையைச் சோ்ந்த நபரை சென்னைக்கு அனுப்பி திட்டத்தைச் செயல்படுத்த முயற்சி மேற்கொண்ட நிலையில், அவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனா்.
அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் அமீா் சுபைா் சித்திக்கை என்ஐஏ அதிகாரிகள் தேடி வந்தனா்.
இதையடுத்து அவரை சா்வதேச காவல் படை (இன்டா்போல்) உதவியுடன் கைது செய்வதற்கான நடவடிக்கையில் சென்னையிலுள்ள என்ஐஏ அதிகாரிகள் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், அமீா் சுபைா் சித்திக் தலைமறைவானதாகத் தெரிகிறது. தொடா்ந்து வரும் அக். 15-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு பூந்தமல்லியிலுள்ள தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.