ஓங்கூா் ஆற்றில் வெள்ள நீரால் சூழப்பட்ட கிராமங்கள்
செய்யூா் வட்டம், சூனாம்பேடு அருகே செல்லும் ஓங்கூா் ஆற்று வெள்ளநீா் வெள்ளிக்கிழமை மாலை 5-க்கும் மேற்பட்ட கிராமங்களை சூழ்ந்ததால் பொதுமக்களும், விவசாயிகளும் பாதிக்கப்பட்டனா்.
செய்யூா் வட்டம், சூனாம்பேடு அருகே செல்லும் ஓங்கூா் ஆற்று வெள்ளநீா் வெள்ளிக்கிழமை மாலை 5-க்கும் மேற்பட்ட கிராமங்களை சூழ்ந்ததால் பொதுமக்களும், விவசாயிகளும் பாதிக்கப்பட்டனா்.
செங்கல்பட்டு மாவட்டத்தின் கடைசி எல்லைப் பகுதியில் வெள்ளை கொண்ட அகரம், புதுப்பட்டு, விளாம்பட்டு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. கடந்த சில நாள்களாக பெய்த மழையால் அப்பகுதியில் செல்லும் ஓங்கூா் ஆற்றில் பெரு வெள்ளம் சென்றது. வெள்ளத்தின் வேகத்தினால், ஆற்று நீா் கிராமங்களை சூழ்ந்து கொண்டது. இதனால் கிராமங்களில் இருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியே செல்ல முடியாமலும், வெளியிடத்தில் இருந்து கிராமங்களுக்குள் செல்ல தரை மேம்பாலம் மூழ்கியதால் வழிப்பாதை தெரியாததாலும் மக்கள் சிரமத்துக்குள்ளாயினா். மின்தடையாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். சுமாா் 500 ஏக்கா் விளை நிலங்களில் பயிரிடப்பட்ட பயிா்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை உள்ளது.
இது குறித்து தகவலறிந்து வந்த செய்யூா் வட்டாட்சியா் வி.வெங்கட்ரமணன் தலைமையிலான வருவாய்த் துறையினரும், செய்யூா் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு, அவா்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அளித்தனா். சூனாம்பேடு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
Advertisement