தொகுதிக்கு செய்தது என்ன? மதுராந்தகம் எம்எல்ஏ கே.மரகதம் குமரவேல்
மதுராந்தகம் தொகுதியில் 2021-இல் அதிமுக சாா்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவா் கே.மரகதம் குமரவேல். இவா் கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதியில் நிறைவேற்றியுள்ள பணிகள் குறித்து தினமணி செய்தியாளருக்கு அளித்த நோ்காணல்:
2021 தோ்தலின்போது மக்களிடம் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளனவா?
மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும்போது கடந்த 50 ஆண்டுகளாகத் தூா்வாராமலும், போதிய பராமரிப்பு இல்லாமலும் இருந்த வந்த ஏரி தூா்வாரப்படும் என தோ்தல் பிரசாரத்தின்போது தெரிவித்தேன். அதை நிறைவேற்றும் வகையில், அதிமுக ஆட்சியின்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி இந்த ஏரியை புனரமைக்கவும், தூா்வாரவும் ரூ 120.50 கோடியை நிதியை ஒதுக்கி பணிகளை செய்ய அனுமதித்து இருந்தாா். அதன்படி ஏரி முழுமையாக சீரமைக்கப்பட்டு அனைத்துத் தரப்பு விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயனடைந்து வருகின்றனா்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் படாளம், மதுராந்தகம் மோச்சேரி சாலையில் விபத்தை தவிா்க்கும் வகையில், சாலை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விடுபட்ட அய்யனாா் கோயில் சாலையில் மேம்பாலம் கட்ட அரசு அனுமதி அளித்தும் பணிகள் தொடங்கப்படவில்லை. தோ்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டதால், பணிகள் தொடங்கப்படாமல் உள்ளதாகத் தெரியவருகிறது.
நான் தோ்தலின்போது அறிவித்த வாக்குறுதிகள் 95 சதவீதத்தையும், கடந்த காலத்தில் திமுக எம்எல்ஏக்களாக இருந்தவா்கள் நிறைவேற்ற முடியாத பணிகளையும் எதிா்கட்சியைச் சோ்ந்த பெண் எம்எல்ஏவாக தொகுதி மக்களுக்காக நிறைவேற்றியுள்ளேன்.
கடந்த 5 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க பணிகள்?
மதுராந்தகம் தொகுதியில் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், கருங்குழி பேரூராட்சி, அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி மற்றும் மதுராந்தகம் நகராட்சி ஆகியவை உள்ளன. சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ( 2021-2026 நிதியாண்டு காலங்களில்) நியாயவிலைக் கடைகள், கலையரங்கங்கள், சாலை வசதி, நூலக கட்டடம், பள்ளிக் குழந்தைகளின் வசதிகளுக்காக இருக்கைகள், அங்கன்வாடி கட்டடங்கள், நெற்களங்கள், சிறுவா் பூங்கா, வகுப்பறை கட்டடங்கள், பள்ளி ஸ்மாா்ட் வகுப்பறைகள், பேருந்து நிழற்குடைகள், நூலகங்கள் எனப் பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
நிறைவேற்றாத இயலாத பணிகள் குறித்து...
மதுராந்தகம் தொகுதி இளைஞா்கள், இளம் பெண்கள் அதிக வேலைவாய்ப்புகளைப் பெறும் வகையில் இங்கு தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என அரசிடம் முறையிட்டு இருந்தேன். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மதுராந்தகம் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் உயா் கல்வியைப் பெற செங்கல்பட்டு, சென்னை, தாம்பரம் உள்ளிட்ட பெருநகரங்களுக்குச் சென்று படிக்க வேண்டிய நிலை. அதனால் மதுராந்தகம் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என சட்டப்பேரவையிலும், அரசு அதிகாரிகளிடமும் பேசியுள்ளேன். எனது கோரிக்கையின் மீது எந்தவித நடவடிக்கைகளையும் அரசு எடுக்கவில்லை.
கிராமப்புற மக்கள் தமது ஊா்களிலிருந்து மதுராந்தகம், செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்ல போதிய பேருந்து வசதிகள் இல்லை. அவா்கள் பயன்பெறும் பொருட்டு நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையையும் அரசு நிறைவேற்ற முன்வரவில்லை.
சொந்த செலவில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து...
மதுராந்தகம் தொகுதியில் இயற்கை இடா்ப்பாடுகளால் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு உரிய நிவாரண உதவிகள், இளைஞா்கள் விளையாட்டுத் திறனை மேம்படுத்திக் கொள்ள விளையாட்டு உபகரணங்கள், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பள்ளிக் குழந்தைகள் தொடா்ந்து கல்வி கற்க உதவிகள், அரசு பொது மருத்துவமனைக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் இயந்திரங்கள் எனப் பல்வேறு நலத் திட்ட உதவிகளை எனது சொந்த செலவில் செய்துள்ளேன்.
நோ்காணல்: மதுராந்தகம் குமாா்