இணையத்தில் 1.2 லட்சம் ஆசிரியர்களின் விவரங்கள்!
சென்னை, ஆக. 28: தமிழகத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 1. 2 லட்சம் ஆசிரியர்களின் அனைத்து விவரங்களும் இணையதளத்தில் பதிவு செய்யப்பட உள்ளன. தமிழக பள்ளிக் கல
சென்னை, ஆக. 28: தமிழகத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 1. 2 லட்சம் ஆசிரியர்களின் அனைத்து விவரங்களும் இணையதளத்தில் பதிவு செய்யப்பட உள்ளன.
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அண்மையில் www.pallikalvi.in என்ற இணையதளம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இது மாணவர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.
அரசு தேர்வுகள் இயக்ககம், மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்ககம், ஆசிரியர் தேர்வு வாரியம், பொது நூலகத் துறை, ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சர்வ சிக்ஷா அபியான் உள்ளிட்ட பள்ளிக் கல்வித்துறைக்கு கீழ் வரும் துறைகளின் விவரங்களும் இடம் பெற்றுள்ளன.
Advertisement
மாவட்டம் வாரியாக உள்ள பள்ளிகளின் விவரம், கல்லூரிகளின் விவரங்களும் இடம்பெற்றுள்ளன.
1.2 லட்சம் ஆசிரியர்களின் விவரங்கள்...: இந்நிலையில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பணியாற்றும் சுமார் 1.2 லட்சம் ஆசிரியர்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் பதிவு செய்ய பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
ஆசிரியர்கள் பணிக்கு சேர்ந்த நாள் விவரம், ஆசிரியர்கள் மீதான புகார் மற்றும் சஸ்பெண்ட் குறித்த விவரங்கள், பணிபுரியும் பள்ளியின் பெயர் மற்றும் ஓய்வுபெறும் நாள் வரை அனைத்து விவரங்களையும் ஒருங்கிணைத்து இணையதளத்தில் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் குறித்த விவரங்களையும் இணையதளத்தில் பதிவு செய்யப்பட உள்ளது.
தேவையான ஆசிரியர்கள் விவரம்...: இப்படி அனைத்து விவரங்களையும் பதிவு செய்வதன் மூலம் ஓராண்டுக்கு எத்தனை ஆசிரியர்கள் ஓய்வு பெறுகின்றனர் என்ற விவரத்தை இணையதளத்திலே அறிந்து கொள்ள முடியும். மேலும் ஒவ்வொரு பாட வாரியாக எவ்வளவு ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள் என்ற விவரத்தையும் விரைவாகத் தெரிந்து கொள்ள முடியும்.
ஆன்-லைனில் பணியிட மாற்ற கலந்தாய்வு: "இப்போது பணியிட மாற்றம் கலந்தாய்வின்போது ஆசிரியர்கள் சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களுக்கு வந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. பதவி உயர்வு, பணியிட மாற்றம் தொடர்பான விவரங்களை ஒவ்வொரு முதன்மைக் கல்வி அலுவலரிடம் இருந்து பெற காலதாமதம் ஆகிறது. அதேபோல கலந்தாய்வுக்கு சென்னை வரும்போது போக்குவரத்து செலவு, தங்கும் செலவு ஆகியவையுடன் சில அசௌகரியங்கள் ஏற்படுகின்றன. கால விரயமும் ஏற்படுகிறது. ஆசிரியர்கள் பணியிட மாற்றம் கலந்தாய்வு ஆன்-லைனில் செய்யும்போது, இது மிகவும் உதவிகரமாக இருக்கும்.
மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் இருந்தபடியே ஆன்-லைனில் பணியிட மாற்றம் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் வசதி விரிவுப்படுத்தப்பட உள்ளது' என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.