முகப்பு
இந்தியா

16! மக்களவையில் புதிர் போட்ட ராகுல்! விடை என்ன?

மக்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது 16 என்ற எண்ணைக் காட்டி ராகுல் புதிர் போட்டது பற்றி..

Updated On : 17 ஏப்ரல் 2026, 4:24 pm IST
ராகுல் காந்தி - PTI
பகிர்:

மக்களவையில் இன்று அரசியலமைப்புச் சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், 16 என்ற எண்ணைக் குறிப்பிட்டு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜகவுக்குத் தனித்துப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதை அவர் குறிப்பிடும் வகையில் இந்த 16 என்ற கணித புதிர் அமைந்திருக்கிறதா? அல்லது அவர் எதைக் குறிப்பிடுகிறார் என்று இணையத்தில் இன்று அலசப்பட்டு வருகிறது.

மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட சட்டத்திருத்த மசோதாக்கள் மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி, மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான கருத்துகளை முன்வைத்துப் பேசி வந்தார்.

Advertisement

Advertisement

அப்போது அவர் திடீரென தனது பேச்சின் பாணியை மாற்றி,

2023 மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை, மக்களவை தொகுதி மறுவரையறை சட்டத் திருத்த மசோதாவுடன் இணைத்துக் கொண்டு வந்த பிரதமர் நரேந்திர மோடியின் திட்டத்தில் 16 என்ற எண் அதிக அர்த்தம் கொண்டிருக்கிறது.

மக்களவையில், இந்த சட்டத்திருத்த மசோதாக்கள் மீது நேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசிக் கொண்டிருந்த போது, நான் இங்கே அமர்ந்து அதனை கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் உற்சாகம் குறைந்து காணப்பட்டார். அவரால் ஒன்றிணைந்து செயல்பட முடியவில்லை. அப்போதுதான் நேற்றைய தேதியை நான் கவனித்தேன். தெளிவாக புரிந்தது, இந்த அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்ற முயன்றது ஒரு தவறு. அது அனைவருக்கும் தெரிந்திருந்தது என்றார்.

என் செல்போனில் ஏப்ரல் 16 என்ற தேதியைப் பார்த்தபோது, ​​‘கடவுளே, என்ன ஒரு ஆச்சரியம்!’ என்று வியந்தேன். அதுதான் அந்த எண், பதினாறு. அந்தப் புதிருக்கான விடை 16 என்ற எண்ணில் உள்ளது. இப்போது நான் சொல்வது யாருக்காவது புரிந்தால், தயவுசெய்து எனக்கு ஒரு தகவல் அனுப்புங்கள் என்று கூறியபடி, ஒரு காகிதத்தில் 16 என்று எழுதப்பட்டிருந்ததைக் காட்டினார்.

இந்த எண்தான், இந்த 16 எண்தான் அந்த எண். இந்த 16 எண்தான் அனைத்துக்குமான பதில். உங்களுக்கு இதற்கான விடை தெரிந்தால் எனக்கு தகவல் அனுப்பலாம். டிவிட்டரிலும் நீங்கள் சொல்லலாம். உங்கள் பிரச்னைகான பதிலும் இந்த 16 என்ற எண்ணில்தான் உள்ளது. அதனை நீங்கள் விரைவில் கண்டடைவீர்கள் என்று ஆளுங்கட்சி உறுப்பினர்களை நோக்கி கைகாட்டியபடி ராகுல் பேசினார்.

தற்போது ராகுல் சொன்ன அந்த 16 எண் ரகசியம் என்னவாக இருக்கும் என்ற கேள்விகள் இணையம் முழுக்க பேசப்பட்டு வருகிறது. அதில், பாஜகவுக்கு 240 உறுப்பினர்கள் உள்ளனர். பிகாரிலிருந்து 12 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெலுங்கு தேசம் கட்சியின் 16 உறுப்பினர்களும் உள்ளனர்.

இவர்களில், தொகுதி மறுவரையறை கொண்டுவரப்பட்டால் தங்களுக்கு பாதிப்பு என்ற அச்சத்தில் தெலுங்கு தேசம் கட்சி, மசோதா மீது வாக்களிக்காதோ என்பதைத்தான் ராகுல் கூறுவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், உண்மையான 16 என்ற எண்ணின் பின்னணி என்ன என்பது இன்னமும் தெரியவரவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.