எவ்வளவு கண்டித்தாலும் போதாது! ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்! ராஜ்நாத் சிங்
பிரதமர் மோடியை மாயாஜாலக்காரர் என்று ராகுல் காந்தி பேசியதற்கு எதிர்ப்பு...
பிரதமர் மோடி குறித்து பேசியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேச தொகுதிகள் மறுவரையறை திருத்த மசோதா, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் நேற்று(ஏப். 16) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு இன்று விவாதம் நடைபெற்று வருகிறது.
விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
Advertisement
Advertisement
அப்போது பிரதமர் மோடியை ஒரு மாயாஜாலக்காரர் என்றும் பாலகோட் தாக்குதல், பணமதிப்பிழப்பு, ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜால வித்தைகளை நிகழ்த்தியவர் என்றும் பிரதமர் தற்போது கையும் களவுமாக பிடிபட்டுவிட்டார் என்றும் பேசினார்.
மேஜிக் காட்டுவதுபோல இப்போது 3 மசோதாக்களையும் ஒன்றன்மீது ஒன்றாக மறைத்துக் கொண்டு வந்துள்ளதாகவும் கூறினார்.
பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி இவ்வாறு பேசியதும் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
உடனே நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எழுந்து, பிரதமர் குறித்து ராகுல் காந்தி முறையற்ற சொற்களைப் பயன்படுத்துவதாகவும் பாலகோட் தாக்குதல்கள், 'ஆபரேஷன் சிந்தூர்' பற்றி பேசி நாட்டின் நற்பெயருக்கும் ராணுவத்திற்கும் களங்கம் விளைவிப்பதாகவும் தெரிவித்தார். பாஜக எம்.பி.க்கள் சிறிது நேரம் அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, ராகுல் காந்தியின் கருத்துக்களை அவைக் குறிப்பிலிருந்து நீக்குமாறு மக்களவைத் தலைவர் ஓம்பிர்லாவிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கோரிக்கை முன்வைத்தார்.
மேலும் பிரதமர் பற்றிப் பேசியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார்.
"நாட்டின் பிரதமர் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பயன்படுத்தும் சொற்கள் மிகவும் துரதிர்ஷ்டவசமானவை. இதை எவ்வளவு கடுமையாகக் கண்டித்தாலும் அது போதாது என்றே நான் கருதுகிறேன்.
பிரதமரை மீண்டும் மீண்டும் 'மாயாஜாலக்காரர்' என்று அழைப்பது உண்மையில் நாட்டு மக்களுக்கே இழைக்கப்படும் அவமதிப்பாகும். அவர் பயன்படுத்திய அந்தச் சொற்களை அவைக் குறிப்பிலிருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் ராகுல் காந்தி இதற்காக மன்னிப்பு கோர வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
Rahul Gandhi Must Apologize: Rajnath Singh
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.