முகப்பு
இந்தியா

மரண நாடகம்! உ.பி.யில் ஆதரவற்ற முதியவரை உயிருடன் எரித்துக் கொன்ற முன்னாள் காவலர்!

உத்தரப் பிரதேசத்தில் ஆதரவற்ற முதியவரை பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர் ஒருவர் எரித்துக் கொன்றது குறித்து...

Updated On : 17 ஏப்ரல், 2026 at 4:28 PM
முதியவரை எரித்துக் கொன்ற முன்னாள் காவலர் ராம்வீர் சிங்... - ENS
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 3:35 PM

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில், பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர் ஒருவர் ஆதரவற்ற முதியவரை எரித்துக் கொலை செய்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராம்வீர் சிங் எனும் காவல் துறை கான்ஸ்டேபிள் ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளால் கடந்த 2013 ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, சட்ட நடவடிக்கைகளுக்கு பயந்து அவர் தலைமறைவானார்.

இதனைத் தொடர்ந்து, சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க ஹத்ராஸ் ரயில் நிலையம் அருகில் உள்ள நடைமேடையில் தனியாக வசித்து வந்த வயது ஆதரவற்ற முதியவர் ஒருவரை ராம்வீர் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து நோட்டமிட்டு வந்துள்ளார்.

Advertisement

பின்னர், கடந்த மார்ச் 12 அன்று இரவு நடைமேடையில் உறங்கிக் கொண்டிருந்த அந்த முதியவர் மீது ராம்வீர் மண்ணெண்ணெய் ஊற்றி அவரை எரித்துக் கொலை செய்துள்ளார். மேலும், பாதி எரிந்த தனது ஆதார் அட்டை மற்றும் செல்போன் ஆகியவற்றை முதியவரின் சடலத்தின் அருகில் அவர் வீசி சென்றதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், இந்தக் கொலையின்போது ராம்வீருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் ஹத்ராஸ் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர், அவர் உடல்நிலை மேலும் மோசமடைந்ததைத் தொடர்ந்து எட்வாவிலுள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ஹத்ராஸ் ரயில் நிலையம் நடைமேடையின் அருகில் எரிந்த நிலையில் இருந்த ஆண் சடலத்தை காவல் துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அது ராம்வீரின் சடலம் எனக் கருதப்பட்டது. ஆனால், வழக்கமாக நடைமேடையில் வசித்த முதியவரைக் காணவில்லை என அப்பகுதிவாசிகள் புகாரளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ராம்வீர் சிங் என்பவருக்கு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக, காவல் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது. பின்னர், போலீஸாரின் விசாரணையில் ராம்வீர் சிங் உயிருடன் இருப்பதும் அந்த சடலம் மாயமான முதியவருடையது என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, விசாரணையின்போது சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க முதியவரை எரித்துக் கொலை செய்துவிட்டு தான் மரணம் அடைந்ததைபோல் நாடகமாட முயன்றதை ராம்வீர் சிங் ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது ராம்வீருக்கு சிகிச்சை முடிவடைந்ததையடுத்து காவல் துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர்.

முன்னதாக, ராம்வீர் சிங்கின் மீது உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ சுமார் 13 குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

In Hathras, Uttar Pradesh, a dismissed police constable burned a destitute elderly man to death.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.