சிறுவனுக்கு பாலியல் தொல்லை: தலைமைக் காவலர் பணிநீக்கம்!
சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமைக் காவலர் வேலப்பன் பணிநீக்கம்.
கோடம்பாக்கத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தலைமைக் காவலர் வேலப்பன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நேற்று(மே 28) பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது சிறையில் உள்ள வடபழனி தலைமைக் காவலர் வேலப்பனை பணி நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சோ்ந்த 16 வயது சிறுவன் ( பிளஸ் 1 மாணவர்) கடந்த 25-ஆம் தேதி கோடை விடுமுறைக்காக தனது பெற்றோருடன், கோடம்பாக்கத்தில் உள்ள உறவினர் குமரேசன் (39) வீட்டுக்கு வந்திருந்தார். இருவர் குடும்பத்தினரும் சிறுவாபுரி முருகன், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில்களுக்கு சென்று வந்தனர். தொடர்ந்து, சிறுவனின் பெற்றோர் 26-ஆம் தேதி சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனர். ஆனால், சிறுவன் மட்டும் உறவினர் வீட்டில் 2 நாள் தங்கியிருந்து வருவதாகக் கூறியதால், அவரை மட்டும் அங்குவிட்டுச் சென்றனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் புதன்கிழமை இரவு குமரேசன், தனது நண்பர் வேலப்பன் (35) என்பவரை வீட்டுக்கு அழைத்து வந்து மது அருந்தினார். சிறிது நேரத்தில் குமரேசன் மது போதையில் அங்கேயே தூங்கினார்.
மது போதையில் இருந்த வேலப்பன், அருகில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை எழுப்பி அவரது வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால், சிறுவன் சப்தமிட்டு அருகில் இருந்த டிவி ரிமோட்டால் வேலப்பனின் தலையில் தாக்கிவிட்டு, வீட்டை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு தப்பினார்.
இதையடுத்து, அந்தச் சிறுவன் அசோக் நகர் காவல் நிலையத்துக்கு நடந்தே சென்று, தனக்கு நேர்ந்த சம்பவத்தை கூறினார். போலீஸார் விரைந்து சென்று வீட்டில் இருந்த வேலப்பனையும், போதையில் தூங்கிய குமரேசனையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில் சிறுவனுக்கு வேலப்பன் பாலியல் தொல்லை கொடுத்ததும், மதுவை வாயில் ஊற்றியதும் உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர் வடபழனி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றுவதும், அசோக் நகர் காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசிப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வேலப்பன் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, அவர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.