மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதல் மேம்பாடு
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதல் மேம்பாடுகள் செய்வதற்கான ஆய்வறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதல் மேம்பாடுகள் செய்வதற்கான ஆய்வறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை மெட்ரோ ரயில் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சென்னையில் ரூ.14,600 கோடி செலவில், மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டு 45.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு 2 வழித்தடங்களில் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
Advertisement
உயர்மட்டப் பாதையில் 14 நிலையங்களும், சுரங்கப் பாதையில் 20 நிலையங்களும் அமைகிறது.
இந்தப் பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் கட்டுமான நிறுவனம், கடந்த ஓராண்டாக வழித் தடங்களில் என்னென்ன கூடுதல் மேம்பாடுகளைச் செய்வது என்பது தொடர்பான ஆய்வையும் மேற்கொண்டு வந்தது.
வர்த்தக மையங்கள்: மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாத வகையில் வர்த்தக மையங்களை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதசாரிகள் மெட்ரோ ரயில் நிலையங்களை எளிதில் கடப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கான ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, பஸ் போக்குவரத்து, பறக்கும் ரயில், மின்சார ரயில் ஆகியவற்றுடன் மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டங்களுக்கான சாத்தியக் கூறுகள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வந்த ஆய்வு முடிந்துள்ள நிலையில், அந்த அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன், இந்தக் கூடுதல் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட்டு விடும் என உயர் அதிகாரி தெரிவித்தார்.