முகப்பு
சென்னை

ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் பார்சல் குவியல்கள்

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பார்சல் குவியல்கள் பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகின்றன.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:20 PM
பகிர்:

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பார்சல் குவியல்கள் பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகின்றன. பல்வேறு ஊர்களுக்கு அனுப்ப வேண்டிய பார்சல்கள் பயணிகள் பயன்படுத்தும் நடைமேடையிலேயே வைக்கப்படுவதால், அவசரமாக ரயிலைப் பிடிக்க வரும் பயணிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது.

ரயில் நிலைய நடைமேடையிலேயே வைக்கப்படும் பார்சல்களால், பயணிகள் பார்சல்கள் மீது மோதுவதும் விழுவதுமாக நடைபெறும் சம்பவங்கள் தொடர் கதையாக உள்ளது.

சென்ட்ரல், எழும்பூரில் பார்சல்களை வைப்பதற்கு தனியாக இடமிருந்தும், ஏன் நடைமேடையிலேயே பார்சல்கள் வைக்கப்படுகின்றன என்பது தெரியவில்லை.

Advertisement

ரயில் நிலைய நடைமேடைகளில் இந்தப் பார்சல்கள், ஒரு ஓரமாக கூட வைப்படுவதில்லை. பயணிகள் ரயிலில் இருந்து ஏறும் இறங்கும் இடத்திலேயே வைக்கபடுவதுதான் பெரும் இடையூறாக இருக்கிறது.

இந்திய ரயில்வேயின் 70 சதவித வருமானம் மற்றும் அதன் லாபத்தின் பெரும்பகுதி சரக்குப் போக்குவரத்தின் மூலமே கிடைக்கிறது. நஷ்டம் ஏற்படுத்தும் பயணிகள் சேவைக்கு மானியம் இதன் மூலமே கிடைக்கிறது.

கட்டண உயர்வு: ரயில்வே பார்சல் கட்டணம் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 25 சதவீதம் உயர்த்தப்பட்டது. ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 2 சதவிகித ரயில்வே மேம்பாட்டு கட்டணம் மற்றும் 3.78 சேவை வரி ஆகியவையும் இந்தக் கட்டணத்துடன் சேரும். பார்சல் கட்டணத்தில் ஆர் ஸ்கேல் மற்றும் எஸ் ஸ்கேல் என இரண்டு விதமான கட்டண விகிதம் உள்ளது. ராஜதானி, சதாப்தி மற்றும் தூரந்தோ ரயில்களுக்கு ஆர் ஸ்கேல் அளவீடும், மற்ற ரயில்களுக்கு எஸ் ஸ்கேல் அளவீடும் பின்பற்றப்படுகிறது.

அனுப்பப்படும் பொருள்கள்: தென் மாவட்டங்களில் இருந்து வட மாநிலங்களான புதுதில்லி, கொல்கத்தா, ஆக்ரா போன்ற இடங்களுக்கு ஏலக்காய் அதிக அளவில் அனுப்பப்படுகிறது. ரயில் போக்குவரத்து இல்லாத இடங்களில் இருந்து பார்சல்கள் லாரிகள் மூலம் வரவழைக்கப்பட்டு, ரயிலில் அனுப்பப்படுகின்றன. மேலும் அலுமினியம், எவர்சில்வர், பைபர் பிளேட், இனிப்புகள், ரெடிமேடு துணிகள் பெருமளவில் மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

பாதுகாப்பு: பேருந்து, லாரி உள்ளிட்ட போக்குவரத்தை காட்டிலும் ரயிலில் பார்சல் அனுப்ப பெரும்பாலோனோர் விரும்புகின்றனர். இதர போக்குவரத்தை கணக்கில் எடுத்துகொண்டாலும், கட்டணமும் குறைவு.

பார்சல்கள் நடைமேடையில் வைப்பது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி கூறியது: "தொலை தூர ரயில்களில் அனுப்புவதற்கான பார்சல்கள், கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும். சில நேரங்களில், உதாரணத்துக்கு கோவையில் இருந்து சென்னை வரும் பார்சல்கள், அடுத்ததாக உடனடியாக டெல்லி செல்ல வேண்டியது இருக்கும். அந்த நேரங்களில் பார்சல்கள் நடைமேடையிலேயே வைக்கப்படும். அதேபோல ரயில் வருவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பாகவே பார்சல்கள் நடைமேடையில் வைக்கப்படுகிறது. இதனால்தான் பயணிகளுக்கு இடையூறாக உள்ளது. இதுபோன்ற இன்னல்கள் வரும் காலத்தில் வராமல் இருக்கு ரயில்வேதுறை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்' என்றார் அவர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடைகளில் பயணிகளுக்கு இடையூறாக உள்ள பார்சல்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments