முகப்பு
சென்னை

பழுதடைந்து பயன்படாமல் கிடக்கும் "தானியங்கி ரயில் டிக்கெட் இயந்திரங்கள்'

சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் பழுதடைந்து பயன்படாமல் கிடக்கின்றன.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:29 PM
பகிர்:

சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் பழுதடைந்து பயன்படாமல் கிடக்கின்றன.

இதன் காரணமாக புறநகர் மின்சார ரயில்களில் பயணம் செய்வோர், கவுன்ட்டர்கள் முன் நீண்ட நேரம் வரிசையில் நின்று டிக்கெட் எடுக்கும் அவலநிலை நிலவுகிறது.

இதனால், பயணிகளுக்கு நேரம் விரயமாவது மட்டுமல்லாமல், குறிப்பிட்ட இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.

Advertisement

என்ன பிரச்னை? : புறநகர் ரயில் நிலையங்களில் முக்கியமானதாக கருதப்படுவது திருவள்ளூர், தாம்பரம் ரயில் நிலைங்களாகும். இந்த இரு மார்கத்திலும் தினம்தோறும் ஏராளமான பயணிகள் பணி நிமித்தமாக மின்சார ரயில்களில் சென்று வருகின்றனர்.

ஆனால், தாம்பரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி ரயில் டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் பழுதடைந்துள்ளன. அவ்வப்போது இவை சரி செய்யப்பட்டாலும் பெரும்பாலும் பழுதடைந்தே காணப்படுகின்றன. இதனால் காலை, மாலை வேளைகளில் கவுன்ட்டர்களில் நின்று டிக்கெட் வாங்குவது பயணிகளுக்கு சுமையாக உள்ளது.

டிக்கெட் எடுப்பதற்காக ரயில் நிலைய கவுன்ட்டர்களில் நீண்ட நேரம் நிற்பதை தவிர்ப்பதற்காகவே தலா ரூ. 3 லட்சம் மதிப்பிலான தானியங்கி ரயில் டிக்கெட் இயந்திரங்கள் 4 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டன. இந்த இயந்திரத்தின் மூலம், புறநகர் ரயில்களுக்கான டிக்கெட் மற்றும் பிளாட்பாரம் டிக்கெட் எடுக்க முடியும்.

ஸ்மார்ட் கார்டு: மேலும் தானியங்கி ரயில் டிக்கெட் இயந்திரம் மூலம் டிக்கெட் எடுக்க ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு ஸ்மார்ட் கார்டுகளை விற்பனை செய்து வருகிறது. இந்த ஸ்மார்ட் கார்டு மூலம் ரூ.50 ரூபாய் முதல் ரூ.2 ஆயிரம் வரை பல்வேறு தொகைகளில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

இக்கார்டுக்கு 5 சதவீதம் போனஸýம் வழங்கப்படுகிறது. உதாரணமாக, ரூ.100 கொடுத்து இக்கார்டை வாங்கினால், ரூ.105-க்கு டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். அத்துடன், இக்கார்டை பெற எவ்வித அடையாள அட்டையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை.

விரைவில் டிக்கெட் எடுக்க வசதியாக அமைக்கப்பட்ட தானியங்கி இயந்திரங்கள் திட்டம் போதிய வெற்றியடையவில்லை. சென்னையின் அனைத்து புறநகர் ரயில் நிலையங்களிலும் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் கடந்தாண்டு புதுப்பிக்கப்பட்டன. சில ரயில் நிலையங்களில் புதிய தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டன.

இந்த இயந்திரங்களை பயணிகள் எளிதாகப் பயன்படுத்தவும், பயணிகளுக்கு உதவவும் ஓய்வுப்பெற்ற ரயில்வே ஊழியர்கள் தாற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். இருப்பினும் அவ்வப்போது டிக்கெட் இயந்திரங்கள் பழுதாகிவிடுகின்றன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியது: தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் பழுதடைந்துள்ளது குறித்து, எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தவுடன் அவற்றை உடனடியாக சரி செய்து விடுகிறோம். மேலும், பயணிகள் சிலர் இயந்திரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் எனத் தெரியாமல் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாகவும் பழுதடைகின்றன. இப்போது சென்னையில் 29 புறநகர் ரயில் நிலையங்களிலும் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் உள்ளன என்றார் அவர்.

போதிய வரவேற்பு இல்லை: பயணிகள் மத்தியில் ஸ்மார்ட் கார்ட் முறைக்கு போதிய வரவேற்பு இல்லை என்று ரயில்வே தரப்பில் கூறப்படுகிறது. சிறிய ரயில் நிலையங்களில் கூட தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் உள்ளன. எளிமையாக இருந்தாலும் இந்த திட்டத்துக்கு மக்களிடையே போதிய வரவேற்பு இல்லை. காரணம் புறநகர் மின்சார ரயில்களில் பயணம் செய்பவர்களில் பெரும்பாலோர் மாதாந்திர சீசன் டிக்கெட் வாங்குபவர்கள்தான். இந்த இயந்திரங்கள் மூலம் டிக்கெட் வழங்கும் திட்டம் வெற்றியடையாமல் போனதற்கு இதுவும் ஓர் காரணம் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments