சிதம்பரம் அருகே சாலை விபத்தில் தலைமை காவலர் பலி
சிதம்பரம் அருகே வெள்ளிக்கிழமை இரவு வாகன விபத்தில் சிதம்பரம் தாலுகா காவல் நிலைய தலைமை காவலர் பலியானது குறித்து....
சிதம்பரம்: சிதம்பரம் அருகே வெள்ளிக்கிழமை இரவு வாகன விபத்தில் சிதம்பரம் தாலுகா காவல் நிலைய தலைமை காவலர் பலியானார்.
கடலூர் மாவட்டம், கோனேரி தாலுக்கா கீரப்பாளையம் மேட்டு தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் எஸ். பிரபு (42). இவர் சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் தேர்தல் ரோந்து பணி முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த போது ஒரத்தூர் காவல் நிலையம் எல்லையான சாத்தமங்கலம் அருகே மினி டோர் லாரி மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் படுகாயம் அடைந்த தலைமை காவலரை அருகில் இருந்தோர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
Advertisement
விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் பிரபுவுக்கு சுமதி என்ற மனைவியும், சமிக்ஷா, ஜீவிஷா ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
விபத்து குறித்து ஒரத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.