6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்ததுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தது குறித்து...
6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்தற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
வரும் 2026-27 கல்வியாண்டுமுதல் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பிலிருந்து மும்மொழி பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை (ஏப்.03) வெளியானது.
இதனைக் கண்டித்த முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
Advertisement
“தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐச் சார்ந்து, அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் என்பது சாதாரண கல்விச் சீர்திருத்தம் அல்ல; அது மொழித் திணிப்பை நோக்கிய, நாம் நீண்டகாலமாக வெளிப்படுத்தி வந்த அச்சங்களை உறுதிப்படுத்தும் வகையிலான, நன்கு திட்டமிடப்பட்ட ஆழ்ந்த கவலைக்குரிய முயற்சியாகும்.
“இந்திய மொழிகளை ஊக்குவிக்கிறோம்” என்ற போர்வையில், இந்தியாவின் செழுமையான மற்றும் பன்மைத்துவம் நிறைந்த மொழிப் பாரம்பரியத்தைத் திட்டமிட்டு ஒதுக்கி, இந்திக்கு முன்னுரிமை அளித்து மையப்படுத்தும் செயலை அரசியல் நோக்கத்துடன் பா.ஜ.க. தலைமையிலான NDA அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
“மும்மொழிக் கொள்கை” என்பது, உண்மையில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை விரிவுபடுத்தும் முயற்சியாகும். தென் மாநில மாணவர்களைப் பொறுத்தவரையில், இந்தத் திட்டம், கட்டாய இந்தி என்பதைக் கடந்து வேறேதுமில்லை. இருப்பினும், இதில் ஒருவருக்கொருவர் இடையிலான பரிமாற்றம் எங்கே இருக்கிறது? இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் அல்லது வங்கம், மராத்தி உள்ளிட்ட மொழிகளைக் கட்டாயமாகப் படிப்பார்களா? இதுகுறித்த தெளிவின்மை, இதிலுள்ள ஒருசார்பையும் - பாகுபாட்டையும் வெளிப்படுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.