ஆண்டுக்கு இரு முறை "குடிநீர் பாதுகாப்பு வாரம்': அரசு புதிய திட்டம்
தமிழகம் முழுவதும் குடிநீரின் தரத்தை மேம்படுத்தும் வகையில் ஆண்டுக்கு இரண்டு முறை "குடிநீர் பாதுகாப்பு வாரம்' அனுசரிக்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் குடிநீரின் தரத்தை மேம்படுத்தும் வகையில் ஆண்டுக்கு இரண்டு முறை "குடிநீர் பாதுகாப்பு வாரம்' அனுசரிக்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் பருவமழைக்கு முன்பாகவும், பின்னரும் இரு முறை மாநிலம் முழுவதும் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு தரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். குடிநீர் தரம் குறைவாக உள்ள மாவட்டங்கள் கண்டறியப்பட்டு, அந்த பகுதிகளில் நிலத்தடி நீரின் தரத்தை மேம்படுத்தக் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு வாரம்: போலியோ சொட்டு மருந்து முகாம்களை நடத்துவது போல மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மற்றும் கிராம பஞ்சாயத்துகளை ஒருங்கிணைத்து இந்தக் குடிநீர் தரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
Advertisement
குடிநீர் பாதுகாப்பு வாரத்தில், கீழ்நிலை மற்றும் மேல்நிலைத் தொட்டிகள் சுத்தபடுத்தப்படும். குடிநீரில் உள்ள குளோரின் அளவு மற்றும் பிற கனிமங்களின் அளவுகளும் பரிசோதிக்கப்படும்.
மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில் இந்தக் குடிநீர் பாதுகாப்பு வாரத்தின் செயல்பாடுகளை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-
பருவமழைக்கு முன்பாக மாநிலம் முழுவதும் தரப் பரிசோதனைகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு பருவமழை முடிந்தவுடன் ஒரு முறை தரப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இதன் மூலம் பருவமழை காரணமாக குடிநீரில் ஏற்படும் தர மாறுபாடுகள் குறித்து அறிந்து கொள்ள முடியும்.
தகவல் பதிவேற்றம்: தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்த தகவல்கள் மற்றும் தரப் பரிசோதனை முடிவுகள் ஆகியவை அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். ஆண்டுக்கு 2 முறை குடிநீர் பாதுகாப்பு வாரம் நடத்தப்படும் பட்சத்தில், ஓரிரு வருடங்களில் அனைத்து ஊர்களிலும் குடிநீரின் தரம் மேம்படுத்தப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இந்தத் திட்டத்தில் குடிநீர் குறித்த தகவல்கள் கணிணியில் பதிவு செய்யப்படுவதால், சென்னையில் இருந்தே மற்ற ஊர்களில் உள்ள நிலைமையை நேரடியாகக் கண்காணிக்கலாம்.
இலவச உபகரணங்கள்: பரிசோதனைகள் மேற்கொள்ள தேவைப்படும் உபகரணங்களை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் மழைநீர் வடிகால் வாரியம் சார்பில் இலவசமாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
ஒரு உபகரணத்தின் விலை ரூ.2,500 ஆகும். இந்த உபகரணத்தை வைத்து 100 முறை பரிசோதனைகள் மேற்கொள்ளலாம். குடிநீரின் தரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் முயற்சியாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.