ஜெர்மனி குருத்வாராவில் சீக்கியர்கள் மோதல்; 11 பேர் காயம்!
ஜெர்மனியில் உள்ள குருத்வாராவில் சீக்கியர்களிடையே ஏற்பட்ட மோதலில் 11 பேர் காயமடைந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜெர்மனியில் உள்ள குருத்வாராவில் சீக்கியர்களிடையே ஏற்பட்ட மோதலில் 11 பேர் காயமடைந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜெர்மனியில் உள்ள மோயர்ஸ் நகரில் சீக்கியர்களின் வழிபாட்டுத் தலமான குருத்வாரா அமைந்துள்ளது. அங்கு ஞாயிறன்று ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளனர்.
குருத்வாராவின் நிதி மற்றும் நிர்வாக தொடர்பான பிரச்னையில் சீக்கியர்களின் இரு பிரிவினருக்குள் மோதல் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Advertisement
இதுபற்றி ஜெர்மன் செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்திகளில், குருத்வாராவில் நீண்ட நாள்களாக முன்னாள் கமிட்டி நிர்வாகிகளுக்கும் தற்போதுள்ள நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்துள்ளது பற்றி குறிப்பிட்டுள்ளனர்.
சீக்கியர்களுக்குச் சொந்தமான நிதி கையாடல் தொடர்பாகவும் அவர்களுக்குள் பிரச்னை எழுந்த நிலையில் குருத்வாரா மீதான கட்டுபாடு மற்றும் செல்வாக்கு முக்கியப் பிரச்னையாகக் இருந்துள்ளது.
இதன் காரணமாக சீக்கியர்கள் 40-க்கும் மேற்பட்டோர் இரு பிரிவாகப் பிரிந்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதில், 11 பேர் காயமடைந்துள்ளனர். இந்த மோதலில் மிளகு ஸ்பிரே, கத்திகள் மற்றும் துப்பாக்கி ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக அருகிலிருந்து பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கு காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர். சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த 100 அதிகாரிகள் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. இதுபற்றிய விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.