தடாவில் தொடங்கியது மெட்ரோ ரயில் தயாரிப்பு பணிகள்
ஆந்திர மாநிலம் தடாவில் உள்ள ஸ்ரீசிட்டியில் அமைந்துள்ள அல்ஸ்தாம் நிறுவனத்தில் சென்னை மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகள் தயாரிப்புப் பணிகள் தொடங்கின.
ஆந்திர மாநிலம் தடாவில் உள்ள ஸ்ரீசிட்டியில் அமைந்துள்ள அல்ஸ்தாம் நிறுவனத்தில் சென்னை மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகள் தயாரிப்புப் பணிகள் தொடங்கின.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின்கீழ் 42 ரயில்களுக்கான 168 பெட்டிகளை தயாரித்து வழங்குவதற்கு பிரேசிலில் உள்ள பிரான்ஸ் நாட்டு அல்ஸ்தாம் நிறுவனம் ஒப்பந்தம் பெற்றுள்ளது.
ஒரு பெட்டியைத் தயாரிக்க சுமார் ரூ.9 கோடி செலவாகிறது. ஒட்டுமொத்தமாக பெட்டிகள் தயாரிப்புக்கு ரூ.1471 கோடியே 39 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பிரேசிலில் இருந்து 9 ரயில்கள் கொண்ட 36 பெட்டிகள் சென்னை வருகின்றன.
Advertisement
மெட்ரோ ரயில் பெட்டிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அல்ஸ்தாம் நிறுவனத்தின் கிளை ஆந்திர மாநிலம் தடாவில் உள்ள ஸ்ரீசிட்டியில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு மீதமுள்ள 33 ரயில்களுக்கான 132 பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.
இங்கு இதுவரை 2 ரயில் தொடருக்கான பெட்டிகள் தயாரிக்கப்பட்டுவிட்டன. மேலும் 4 தொடர்களுக்கான பெட்டிகளைத் தயாரிக்கும் முதற்கட்டப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பிரேசில் பெட்டிகள்: பிரேசில் நாட்டில் இருந்து இதுவரை 12 பெட்டிகள் கொண்ட மூன்று மெட்ரோ ரயில்கள் வந்துள்ளன. இந்த ரயில்கள் கோயம்பேடு பணிமனையில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும் 2 ரயில் தொடர்கள் ஓரிருநாள்களில் சென்னை வந்தடையும் எனத் தெரிகிறது.
ஜூன் மாதத்துக்குள் மீதமுள்ள பெட்டிகள் அடங்கிய ரயில்களும் வந்தடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆந்திரம் மாநிலம் தடாவில் உள்ள ஸ்ரீசிட்டியில் தயாரிக்கப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரயில். (வலது) ரயில் பெட்டியின் உள்தோற்றம்.