முகப்பு
சென்னை

7 நாள்களில் 526 பயணிகள் மட்டுமே பயன்படுத்தியுள்ளனர்

சென்னை எழும்பூர் - தாம்பரம் இடையிலான மின்சார ரயில் சேவைக்கான காகிதமற்ற பயணச் சீட்டை எடுக்கும் செல்லிடப்பேசி செயலி கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:17 AM
பகிர்:

சென்னை எழும்பூர் - தாம்பரம் இடையிலான மின்சார ரயில் சேவைக்கான காகிதமற்ற பயணச் சீட்டை எடுக்கும் செல்லிடப்பேசி செயலி கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த 7 நாளில் 526 பயணிகள் மட்டுமே இந்தச் செயலி வழியாக பயணச் சீட்டு எடுத்திருப்பதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கானோர் பயன்படுத்தும் சென்னை எழும்பூர் - தாம்பரம் இடையிலான ரயில் சேவையில் செல்லிடப்பேசி செயலியை அறிமுகப்படுத்திய நாளில் இருந்து சராசரியாக நாள் ஒன்றுக்கு 53 பேர் மட்டுமே இதனை பயன்படுத்தி உள்ளனர்.

இந்தியா முழுவதும் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளில் நாள்தோறும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். அவர்களுக்கு பயணச் சீட்டு அச்சிடுவதற்காக 1,200 மெட்ரிக் டன் காகிதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக ஏராளமான நிதி ஒதுக்கப்படுகிறது.

Advertisement

இந்தச் செலவைக் குறைக்கும் வகையில், காகிதமற்ற பயணச் சீட்டு முறையைக் கொண்டு வருவதற்கு கடந்த ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, தற்போது காகிதப் பயணச் சீட்டுக்கு மாற்றாக இந்த செல்லிடப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பயன்படுத்துவது எப்படி? ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசியில் "கூகுல் பிளே ஸ்டோர் செயலித் தொகுப்பு மூலமாகவும், "விண்டோஸ் ஸ்டோர் செயலித் தொகுப்பு வழியாகவும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த செயலிக்குள் சென்று ரயில்வே வாலட் மூலமாக பயணக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

அதன் பின்னர், பயணச் சீட்டு உறுதி செய்யப்பட்ட திரையானது, பயணியின் செல்லிடப்பேசிக்கு அனுப்பப்படும். டிக்கெட் பரிசோதகரிடம் இதைக் காண்பித்தாலே போதுமானது.

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை நோக்கிய ஒரு நடவடிக்கையாக, இந்த முறையை ரயில்வே தகவல் அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர்.

இந்த ரயில்வே பயணச் சீட்டு செயலி முறையானது, சோதனை அடிப்படையில் தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் எழும்பூர் - தாம்பரம் வழித்தடத்தில் 15 புறநகர் ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு தேவை: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகளுக்கு இந்த செயலி சேவை குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. ஸ்மார்ட் செல்லிடப்பேசி வைத்திருக்கும் பயணிகள் இன்னும் கவுன்ட்டர்களில் நின்று பயணச் சீட்டை பெறும் நிலை தொடர்கிறது. இந்த வசதி தொடர்பாக தெற்கு ரயில்வே விழிப்புணர்வு பதாகைகள், சுவரொட்டிகள் ஒட்ட வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. முறையாக விளம்பரம் செய்தால் அனைத்து பயணிகளும் இந்தச் செயலி சேவையை பயன்படுத்துவார்கள் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments