சென்னையில் மீண்டும் சம்பவம்: குழந்தையை கடத்த வந்ததாக தொழிலாளி மீது தாக்குதல்
சென்னை கொத்தவால்சாவடியில், குழந்தையைக் கடத்த வந்ததாக நினைத்து தொழிலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கொத்தவால்சாவடியில், குழந்தையைக் கடத்த வந்ததாக நினைத்து தொழிலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சென்னை கொத்தவால்சாவடி ஆறுமுகம் தெருவில் குடிசைப் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை மதுபோதையில் ஒரு நபர் வந்தார். அந்த நபர், அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தாராம். இதைப் பார்த்து சந்தேகமடைந்த அந்தப் பகுதி பொதுமக்கள், அந்த நபரைப் பிடித்து விசாரித்தனர். ஆனால் அந்த நபர், முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினாராம்.
இதனால், அந்த நபர் குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்த நபராக இருக்கலாம் என நினைத்து தாக்கினர். அதைத் தொடர்ந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து அந்த நபரைப் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், அந்த நபர், கொத்தவால்சாவடி சின்னதம்பித் தெருவைச் சேர்ந்த சேட்டு (41) என்பதும், அவர் கொத்தவால்சாவடி பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருவதும், மதுபோதையில் இருந்ததால் குழந்தைகளிடம் பேசியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் சேட்டுவை எச்சரித்து விடுவித்தனர்.
ஏற்கெனவே, வட சென்னையில் இரு வாரம் முன்பு குழந்தை கடத்த வந்ததாக பிகாரைச் சேர்ந்த ஒரு இளைஞர் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.