பாஜகவின் வலையில் அதிமுக மாட்டிக்கொண்டுள்ளது: அமைச்சர் துரைமுருகன் பேட்டி
பாஜகவின் வலையில் அதிமுக மாட்டிக்கொண்டுள்ளது என்று திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் விமரிசனம் குறித்து...
பாஜகவின் வலையில் அதிமுக மாட்டிக்கொண்டுள்ளது என்று திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் விமரிசனம் செய்தார்.
தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தனது வீட்டில் கருப்புக் கொடி ஏற்றினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
Advertisement
5 மாநிலங்களில் தோ்தல் நடைபெறும் நேரத்தில் அதுவும் தமிழ்நாடு, மேற்கு வங்கத்துக்கு விரைவில் வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில், இந்த மாநிலங்களைச் சோ்ந்த 67 எம்.பி.க்கள் மக்களவை கூட்டத் தொடரில் பங்கேற்கக் கூடாது என்று திட்டமிட்டே அவசர அவசரமாக மத்திய அரசு நாடாளுமன்றக் கூட்டத் தொடரை அறிவித்துள்ளது அவசியமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, தேர்தல் பரபரப்பான சூழ்நிலையில், தொகுதி மறுவரையறை குறித்த அரசியல் சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வருவது அவசியமா என அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.
தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு அதிமுக எதிப்பு தெரிவிக்கவில்லையே என்ற கேள்விக்கு, பாஜகவின் வலையில் அதிமுக மாட்டிக்கொண்டுள்ளது.
மத்திய பாஜக அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை அவசர அவசரமாக கொண்டுவருவதன் நோக்கம், எந்த மாநிலத்தின் தயவும் இல்லாமல் சட்டங்களை இயற்றவும், திட்டங்களை நடைமுறைப்படுத்தவும், தான் நினைத்ததை செய்யலாம் என நினைக்கிறது. மேலும், கொஞ்சம் கொஞ்சமாக இது கூட்டாட்சி நாடாக இல்லாமல் ஒரே நாடாக மாற்றப்பார்க்கிறார்கள். அதனால் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டு சர்வாதிகாரியாக இருக்க பார்க்கிறார்கள். இது பிரச்னையாக உருவானால் மக்கள் போராடுவார்கள் என துரைமுருகன் கூறினார்.