ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்களுக்கு இடையூறு: 7 பேர் கைது
சென்னையில் தமிழக ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் தமிழக ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சென்னை அண்ணா நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு இல்ல நிகழ்ச்சிக்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புறப்பட்டார். கோட்டூர்புரம் சர்தார் பட்டேல் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஆளுநரின் வாகனத்துக்கும், அவரது பாதுகாப்பு வாகனங்களுக்கும் இடையூறு செய்யும் வகையில் 4 மோட்டார் சைக்கிள்களில் 7 பேர் சென்றனர். மேலும் அவர்கள், ஆளுநர் வாகனத்தை முந்திச் சென்றனர். இதைப் பார்த்த ஆளுநரின் பாதுகாப்புப் பிரிவு போலீஸார், அடையாறு போக்குவரத்துப் பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து போக்குவரத்து போலீஸார் 4 மோட்டார் சைக்கிளில் சென்ற 7 பேரையும் சிறிது நேரத்தில் மடக்கிப் பிடித்தனர். போலீஸார் பிடிபட்டவர்களிடம் விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள், அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் தினேஷ் (21), நவீன் (21), தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மரிய அந்தோனி (20), ஹரிபிரசாத் (19), தனியார் நிறுவன ஊழியர்கள் அருண் (24), கணேஷ் (26), லோகேஷ் (25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அவர்கள் 7 பேரையும் கைது செய்து, 4 கடுமையான சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.