ஈரான் போரால் ஏற்பட்ட பாதிப்பு: அமெரிக்காவின் பிரபல விமான நிறுவனம் மூடல்!
அமெரிக்காவின் பட்ஜெட் விமான சேவை நிறுவனமான ஸ்பிரிட் நிறுவனம் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் பட்ஜெட் விமான சேவை நிறுவனமான ஸ்பிரிட் நிறுவனம் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் பட்ஜெட் விமானங்கள் எனப்படும் ஸ்பிரிட் விமான நிறுவனம் மிகக் குறைந்த விலையில் விமான சேவைகளை வழங்கி வந்தது.
மேற்காசிய போர் காரணமாக ஏற்பட்ட எரிபொருள் விலையுயர்வு மற்றும் நிதி நெருக்கடி காரணமாக ஸ்பிரிட் விமான நிறுவனம் மூடப்படுவதாக இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Advertisement
இதுதொடர்பாக ஸ்பிரிட் விமான சேவை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “ஸ்பிரிட் நிறுவனம் மே 2, 2026 முதல் விமான சேவையை நிறுத்திக் கொள்வதாக மிகுந்த ஏமாற்றத்துடன் தெரிவித்துக் கொள்கிறது. அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டு, வாடிக்கையாளர் சேவை முற்றிலும் நிறுத்தப்படுகிறது என பயணிகளிடம் தெரிவித்துக்கொள்கிறோம்.
விமான சேவைத் துறையில் கடந்த 34 ஆண்டுகளாக மிகக் குறைந்த விலையில் முன்மாதிரியான சேவை வழங்கி தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு நாங்கள் பெருமை கொள்கிறோம். எங்களின் பயணிகளுக்கு மேலும் பல ஆண்டுகள் சேவை செய்ய விரும்பினோம்" என்று தெரிவித்துள்ளனர்.
ஸ்பிரிட் நிறுவனத்தின் இந்த முடிவு விமானப் போக்குவரத்துத் துறை மற்றும் பயணிகளிடையே பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பயணிகளுக்கு மலிவான விலையில் விமான சேவை வழங்கி நீண்டகாலமாக இந்தத் துறையில் முக்கியப் பங்காற்றி வந்த ஸ்பிரிட் நிறுவனம், அமெரிக்க விமானப் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகித்தது.
முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பியளிப்பதாகவும் அவர்கள் வேறு விமான நிறுவனம் மூலம் பயணத்தைத் தொடரவும் அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
ஸ்பிரிட் நிறுவனத்தின் இந்த முடிவால் கிட்டதட்ட 17,000 தொழிலாளர்கள் வேலை இழப்பால் பாதிக்கப்படுவர். இதில், ஸ்பிரிட் நிறுவனப் பணியாளர்கள் 14,000 பேர் மற்றும் ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களும் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரான் போர் காரணமாக ஜெட் விமானங்களுக்கான எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்த நிலையில், அதற்கு முன்னரே ஸ்பிரிட் நிறுவனம் திவால் நிலையில் இருந்ததாகவும் நிதி நெருக்கடிகளைச் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த விலையுயர்வால் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.
இந்நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளில் இருமுறை திவாலானதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, நிறுவனத்தை மீட்கும் விதமாக டிரம்ப் நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், கடன் வழங்குவோர் அதனை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் டிரம்ப் இந்த ஒப்பந்தத்திற்கு தனது ஆதரவைத் தெரிவித்திருந்தாலும், ஒரு விமான நிறுவனத்திற்கு மட்டும் நிதி உதவி வழங்கும் இந்த முயற்சிக்கு, விமானத் துறை மற்றும் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் என இரு தரப்பினரிடமிருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்ததால் இந்த முடிவு கைவிடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.