மெட்ரோ ரயில் நிலையங்களில் வியாழக்கிழமை (ஜன. 3) முதல் இலவச மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடைபெற உள்ளன. அதன்படி, ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, இதயத் துடிப்பு விகிதம் உள்ளிட்ட பரிசோதனைகள் அங்கு கட்டணமின்றி மேற்கொள்ளப்பட உள்ளன.
ஜனவரி மாத இறுதி வரை இலவச மருத்துவப் பரிசோதனை முகாம்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் எம்ஜிஎம் ஹெல்த்கேர் அமைப்பு சார்பில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை நேரு பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்த முகாம் தொடங்குகிறது. அதன்பின்னர் கீழ்ப்பாக்கத்தில் 4-ஆம் தேதியும், சென்ட்ரலில் 9-ஆம் தேதியும், ஷெனாய் நகரில் 10-ஆம் தேதியும் மருத்துவ முகாம்கள் நடைபெறும்.
அண்ணா நகர் கிழக்கு, அண்ணா நகர் டவர், திருமங்கலம், கோயம்பேடு, சிஎம்பிடி, அரும்பாக்கம், வடபழனி மெட்ரோ ரயில் நிலையங்களில் முறையே 11, 17, 18, 23, 24, 25, 31-ஆம் தேதிகளில் இலவச மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடைபெற உள்ளன. காலை 8 மணி முதல் 11 மணி வரை பொதுமக்களும், பயணிகளும் அதில் பங்கேற்று கட்டணம் இன்றி மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.