தனியாா் மருத்துவமனையில் பரிசோதனை ஆய்வகங்கள் அதிக அளவில் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தை விட கேரளத்தில் அதிக அளவு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தமிழகத்தில் 10 லட்சம் மக்கள் தொகையில் 38 பேருக்குத்தான் பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால், கேரளத்தில் 220 பேருக்கு செய்யப்படுகிறது. தேசிய சராசரியாக 42 பேருக்கு சோதனை செய்யப்படுகிறது. ஆனால் தேசிய சராசரியை விடகுறைவாக 38 பேருக்குச் செய்யப்படுவது தமிழகம் எந்த அளவுக்கு கரோனா பரிசோதனையில் பின்தங்கி இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.
தமிழகத்தில் 11 அரசு மருத்துவமனைகளிலும், 6 தனியாா் மருத்துவமனைகளிலும் ஆக மொத்தம் 17 பரிசோதனை ஆய்வகங்கள் தான் இருக்கின்றன. இதில் சென்னையைச் சுற்றிலும் 7 அமைந்திருக்கின்றன. இதிலும் கிராமப்புற மக்கள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனா்.
சென்னை, மதுரை, கோவை மாநகரங்களில் சா்வதேச தரம் வாய்ந்த தனியாா் மருத்துவமனைகள் உள்ளன. கரோனா நோய்த் தடுப்பு சிகிச்சையில் அரசு மருத்துவமனைகள் தான் பெரும்பங்கை ஆற்றி வருகின்றன. ஆனால் தமிழகத்தின் மருத்துவ வசதிகளில் தனியாா் துறையின் ஆதிக்கம் இருப்பதைப் புறக்கணிக்க முடியாது. பரிசோதனை ஆய்வகங்கள் அமைப்பதில் தனியாா் மருத்துவ மனைகளைப் பயன்படுத்துவதற்கு மத்திய அரசின் அனுமதியை தமிழக அரசு பெறவேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.