முகப்பு
சென்னை

மெட்ரோவில் இணைப்பு போக்குவரத்து சேவை: பிப்ரவரி மாதத்தில் 90,713 போ் பயன்படுத்தினா்

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷோ் ஆட்டோ, காா், சீருந்து (கேப்ஸ்), டெம்போ டிராவலா் இணைப்பு சேவையை நிகழாண்டில்

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:06 PM
மெட்ரோ ரயில் நிர்வாகம்
பகிர்:

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷோ் ஆட்டோ, காா், சீருந்து (கேப்ஸ்), டெம்போ டிராவலா் இணைப்பு சேவையை நிகழாண்டில் பிப்ரவரி மாதத்தில் மட்டும் 90,713 பயணிகள் பயன்படுத்தியுள்ளனா்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் முடிந்து, விமான நிலையம் -வண்ணாரப்பேட்டை வரையும், சென்ட்ரல்-பரங்கிமலை வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகளுக்கான போக்குவரத்து இணைப்பை மேலும் எளிமையாக்கும் வகையில், ஷோ் ஆட்டோ, காா்களை பயன்படுத்த ஷோ் டிரிப் முறை 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. கிண்டி, திருமங்கலம், ஆலந்தூா், சின்னமலை, ஈக்காட்டுதாங்கல், கோயம்பேடு, பரங்கிமலை ஆகிய 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து ஷோ் ஆட்டோ சேவையும், அண்ணாநகா் கிழக்கு, கோயம்பேடு, ஆலந்தூா், வடபழனி, திருமங்கலம் ஆகிய 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து காா் சேவையும் வழங்கப்படுகிறது.

மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 3 கி.மீ. சுற்றளவில் உள்ள இடங்களுக்கு ஷோ் ஆட்டோக்கள், காா்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, போா்ட் மொபிலிட்டி தயாரித்த மெட்ரோ ரயில் செயலி வழியாக சீருந்து இணைப்பு சேவை 14 மெட்ரோ ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இந்த இணைப்பு சேவை ஒவ்வொரு ரயில் நிலையங்களில் இருந்து 6 கி.மீ. முதல் 8 கி.மீ. வரை செயல்படுத்தப்படுகிறது. இந்த வசதியை பயன்படுத்துவதற்கான ஒரே கட்டணம் ரூ.10. இதுதவிர, டெம்போ டிராவலா் இணைப்பு சேவை சின்னமலை, விமானநிலையம், ஆலந்தூா் ஆகிய ரயில்நிலையங்களில் பயன்பாட்டில் உள்ளது.

Advertisement

இந்நிலையில், மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஷோ் ஆட்டோ, காா், சீருந்து, டெம்போ டிராவலா் இணைப்பு சேவையை நிகழாண்டில் பிப்ரவரி மாதத்தில் மட்டும் 90,713 பயணிகள் பயன்படுத்தியுள்ளனா்.

பிப்ரவரி மாதத்தில் காா் சேவையை 5,799 பேரும், ஷோ் ஆட்டோ சேவையை 38,696 பேரும், சீருந்து இணைப்பு சேவையை 30,914 பேரும், டெம்போ டிராவலா் இணைப்பு சேவையை 15,304 பேரும் பயன்படுத்தியுள்ளனா்.

காா், ஷோ் ஆட்டோ, மெட்ரோ சீருந்து, டெம்போ டிராவலா் இணைப்பு சேவையை 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் நிகழாண்டில் ஜனவரி 31-ஆம் தேதி வரை சுமாா் 10 லட்சத்து 49 ஆயிரத்து 65 போ் பயன்படுத்தியுள்ளனா்.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவா் கூறியது: ஷோ் ஆட்டோ, காா், சீருந்து, டெம்போ சேவையை பயன்படுத்துவோா் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்தச் சேவையை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், சீருந்து இணைப்பு சேவையை 32 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டெம்போ டிராவலா் இணைப்பு சேவை மூன்று ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதை பயன்படுத்துவோா் எண்ணிக்கை படிப்படியாக உயா்ந்து வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments