ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் பின்வாங்கப்படாது! டிரம்ப் எச்சரிக்கை
ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருப்பது பற்றி...
ஈரானுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும் வரை அமெரிக்காவின் முப்படைகளும் பின்வாங்கப்படாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 40 நாள்களுக்கு மேலாக நீடித்து வந்த போர், பாகிஸ்தான் மத்தியஸ்தத்தின்பேரில் இரு வாரங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
ஈரானும் தற்காலிகமாக இரண்டு வாரங்களுக்கு அனைத்து சரக்கு கப்பல்களுக்கும் ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதாக ஒப்புக் கொண்டுள்ளன.
Advertisement
மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான அமைதி ஒப்பந்தப் பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் நாளை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவின் படைகள் பின்வாங்கப்படாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது:
"ஒப்பந்தம் முழுமையாக கடைப்பிடிக்கப்படும் வரை, ஏற்கெனவே பலவீனமடைந்துள்ள எதிரியைத் துல்லியமாகத் தாக்கி அழிப்பதற்குப் பொருத்தமான மற்றும் அவசியமான கூடுதல் வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் பிற தளவாடங்களுடன் கூடிய அனைத்து அமெரிக்க கப்பல்கள், விமானங்கள் மற்றும் ராணுவ வீரர்களும் ஈரானிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும்.
ஒப்பந்தத்தை மீறுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றாலும், ஒப்பந்தம் மீறப்பட்டால், துப்பாக்கிச் சூடு தொடங்கும். அது இதுவரை எவரும் கண்டிராத வகையில், மிக வலிமையாக இருக்கும்.
அணு ஆயுதங்கள் வைத்திருக்கக் கூடாது, ஹோர்முஸ் நீரிணை திறப்பு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, அமெரிக்க ராணுவம் ஆயுதங்களை நிரப்பிக் கொண்டும், ஓய்வெடுத்துக் கொண்டும் இருக்கிறது. வெற்றியை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.