சென்னை, ஆக. 8: வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 940 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: வார இறுதி நாள்களான வெள்ளி (ஆக. 9) சனி (ஆக. 10), ஞாயிறு (ஆக. 11) ஆகிய தினங்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தங்கள் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதால், தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 275 பேருந்துகளும், சனிக்கிழமை 315 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படவுள்ளன.
மேலும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 55 பேருந்துகளும், சனிக்கிழமை 55 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
பெங்களூரு, திருப்பூா், ஈரோடு, கோயம்புத்தூா் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுபோல, மாதவரத்திலிருந்து வெள்ளிக்கிழமை 20 பேருந்துகளும், சனிக்கிழமை 20 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படுகின்றன.
மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.